This Article is From Aug 22, 2019

மாலை 4 மணிக்கு சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என தகவல்!!

ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மாலை 4 மணிக்கு சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என தகவல்!!

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிதம்பரம் அழைத்துச் செல்லப்பட்டார்.

New Delhi:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கும் ப.சிதம்பரம் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

டெல்லியில் தன்மீதான விமர்சனங்களுக்கு நேற்று பதிலளித்து விட்டு வீட்டிற்கு சென்ற முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த காத்துக் கொண்டிருந்தனர். அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் பரவியதால் காங்கிரஸ் தொண்டர்கள் சிதம்பரம் வீட்டின் முன்பு குவிந்திருந்தனர். முன்னதாக சிதம்பரத்தின் வீட்டின் கதவை அதிகாரிகள் தட்டியபோது, அதனை திறக்கவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து வீட்டின் சுவர் ஏறிக்குதித்து விசாரணை அதிகாரிகள் உள்ளே சென்றனர். 

வீட்டினுள்ள மூத்த வழக்கறிஞர்களுடன் ப.சிதம்பரம் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் சிதம்பரத்தை கைது செய்து சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிதம்பரத்தை அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்த நிலையில், முன் ஜாமீன் கேட்டு தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் தான் எங்கும் ஓடி ஒளிந்து விடவில்லை. வழக்கை சந்திக்க விரும்புவதாக ப.சிதம்பரம் கூறியிருந்தார்.

கடந்த 2007-ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் (P Chidambaram) இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இந்த விவகாரத்தில் அந்த நிறுவனத்துக்கு சாதகமாக கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதுதொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

.