
7வது நாளாக அமெரிக்கா, பிரேசிலை விட தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் அதிகம்!
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 53,601 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 22,68,675 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, ஏழாவது நாளாக உலகளவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக பதிவாகி வருகிறது. இது அமெரிக்கா, பிரேசிலை விட அதிகமாகும்.
இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 15.8 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர் என அரசு தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன. இதனால், குணமடைபவர்களின் எண்ணிக்கையானது 69.79 சதவீதமாக ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 871 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 45,000ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தமிழகம், கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாக பதிவாகியுள்ளது.
ஆக.7ம் தேதி முதல் 10ம் தேதி வரை மட்டும் இந்தியாவில் தினமும் 60,000க்கும் மேற்பட்ட கொரோனா வழக்குகள் பதிவாகி வந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இதுவரை இல்லாத அளவாக 64,399 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
ஒரே வாரத்தில் 3 லட்சத்திற்கு அதிகமான கொரோனா நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 லட்சத்தை கடக்க 193 நாட்கள் எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து 10 மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொள்கிறார்.