This Article is From Jun 03, 2020

அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களுக்கிடையில் இந்தியா எல்லைப் பிரச்னை குறித்து விவாதித்த ட்ரம்ப்!

ஜார்ஜ் பிலாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், சமீபத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இதற்கிடையில், அமெரிக்காவானது இந்திய சீன எல்லைப்பிரச்னையில் ஆலோசனை வழங்கிக்கொண்டிருக்கின்றது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் பேசினர் என்று அரசு தெரிவித்துள்ளது

New Delhi:

அமெரிக்கா மட்டுமல்லாது, ஐரோப்பாவில்கூட சில நாடுகளில் ஜார்ஜ் பிலாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், சமீபத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இதற்கிடையில், அமெரிக்காவானது இந்திய சீன எல்லைப்பிரச்னையில் ஆலோசனை வழங்கிக்கொண்டிருக்கின்றது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் லடாக் எல்லை பிரச்னை குறித்து சுமார் 25 நிமிடம் தொலைப்பேசி கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்கள் என அரசு தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த கலந்துரையாடலின் இறுதியா மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்த தகவல்களை அரசு தெரிவிக்கவில்லை.

கடந்த வாரம் ட்ரம்ப் இந்திய, சீன எல்லை பிரச்னையில் தான் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக தெரிவித்திருந்தார். ஆனால், இந்திய அரசு இதற்கான அவசியத்தினை மறுத்துவிட்டது, இந்த எல்லை பிரச்னை குறித்து இந்தியப் பிரதமருடன் தான் பேசியதாக ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். அதையும் இந்தியா மறுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து, லடாக் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இந்தியாவுக்கு எதிரான சீன ஆக்கிரமிப்பால் இந்தியா மிகவும் கவலையடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. மேலும், “தற்போது இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள எல்லை பிரச்னையை தீர்க்க சீனா, விதிமுறைகளை மதிக்க வேண்டும். அதனுடன் ராஜதந்திர பேச்சுவார்த்தை மற்றும் இதர வழிகளை பயன்படுத்த வேண்டும்“ என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுக் குழுவின் தலைவர் எலியட் ஏங்கல் சமீபத்தில் கூறியிருந்தார்.

லடாக் மற்றும் சிக்கிம் பகுதிகளில் இந்தியா வழக்கமான ரோந்து பணிகளை மேற்கொள்ள சீன ராணுவம் குறுக்கீடு செய்வதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயான பதற்றம் சீன ராணுவத்தின் தலையீட்டினால்தான் உருவானது என்பதை சீனா முற்றிலுமாக மறுத்துள்ளது.

1962-ல் இதுபோன்ற ஒரு எல்லைப் பிரச்னையையொட்டி இந்தியா-சீனா போர் நடைபெற்றது. அதற்கு பிறகு 2017-ல் இது போன்ற ஒரு எல்லை பிரச்னை மூன்று மாதங்கள் வரை உரசலாக நீடித்தது.

இது இவ்வாறு இருக்க, ட்ரம்ப் ஜி7 உச்சி மாநாட்டிற்கு மோடியை அழைத்துள்ளார். “தற்போது உள்ள உறுப்பினர்களுடன் இதர பிரதிநிதிகளையும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற செய்து ஜி7 மாநாட்டின் நோக்கத்தினை விரிவு படுத்த வேண்டும்” என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது அமெரிக்காவில் நடந்து வரும் உள்நாட்டு சிக்கல்கள் குறித்து கவலை தெரிவித்த மோடி, தற்போதைய நிலைமையை முன்கூட்டியே உணர்ந்து அதை மாற்றுவதற்காக தனது வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தார்.

தொலைப்பேசி உரையாடலில் எல்லை பிரச்னையோடு சேர்த்து, இரு நாடுகளிலும் உள்ள பிரதான சிக்கலான கொரோனா தொற்றை கையாளுதல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அரசு தரப்பு தரவுகள் தெரிவித்துள்ளன.

முன்னதாக ட்ரம்ப் உலக சுகாதார நிறுவனத்தினுடனான அமெரிக்காவின் உறவினை துண்டிப்பதாக அறிவித்திருந்தார். அதே போல அதற்கான நிதி பகிர்வையும் அவர் நிறுத்தி வைத்திருந்தார். இதற்கான காரணங்களாக, “உலக சுகாதார நிறுவனம் சீனாவின் கைப்பாவையாக செயல்படுகிறது” என்கிற காரணத்தினை முன்வைத்திருந்தார். இந்நிலை தொடருமானால் சுகாதார நிறுவனத்திற்கான நிரந்தர நிதி வெட்டு தொடரும் எனவும் ட்ரம்ப் கூறியிருந்தார்.

.