This Article is From Nov 09, 2019

அயோத்தி விவகாரம்: கி.பி 1528 முதல் இன்று வரை.. 10 முக்கிய தகவல்கள்!!

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியானதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி விவகாரம்: கி.பி 1528 முதல் இன்று வரை.. 10 முக்கிய தகவல்கள்!!

உத்தர பிரதேசத்தில் குறைந்தது 12,000 பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

New Delhi:

இந்தியாவே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்பட்டது. இதன்படி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் கோயில் கட்டுவதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது. இஸ்லாமியர்கள் தரப்பில் வழக்குத்  தொடர்ந்த வக்ப் வாரியத்திற்கு மாற்று இடமாக 5 ஏக்கர் வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு, பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பிறகு தீர்ப்பை வெளியிட்டுள்ளனர்.  இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

பாபர் மசூதி 1528ஆம் ஆண்டில் அயோத்தியில் கட்டப்பட்டது. இது கோவிலை இடித்து கட்டப்பட்டதாக இந்து குழுக்கள் கூறுகின்றன. 1853ஆம் ஆண்டு முதன் முறையாக அங்கு வகுப்புவாத மோதல்கள் நடந்தன.

இதைத்தொடர்ந்து., 1859ஆம் ஆண்டில் பிரிட்ஷ் ஆட்சியில் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் தனித்தனி வழிபாட்டுத் தலங்கள் அமைத்து சுற்றி வேலி அமைத்தது. இது கிட்டதட்ட 90 ஆண்டுகளாக அப்படியே நீடித்தது. இதன் பின்னர் 1949ம் ஆண்டில் மசூதிக்குள் ராமர் சிலைகள் வைக்கப்பட்டதை அடுத்து, இந்த நிலத் தகராறு முதல் முறையாக நீதிமன்றத்திற்கு சென்றது. 

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்த வழக்கை முதலில் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-ல் தனது தீர்ப்பை வழங்கியது. இதன்படி, வழக்குத் தொடர்ந்த சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் நிலத்தை சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. 

இதை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்தது

விசாரணை நடந்து கொண்டு இருந்த போதே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும் யோசனையை முன்வைத்த அரசியல் சாசன அமர்வு, ஓய்வுபெற்ற நீதிபதி கலிபுல்லா, வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை அமைத்தது. 

அந்த குழு சம்பந்தபட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை சுமுகமாக தீர்க்க முயற்சி எடுத்தனர். எனினும், முடிவு எட்டப்பவில்லை. இதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வு தினசரி விசாரித்து வந்தது. தொடர்ந்து 40 நாட்களாக நடைபெற்று வந்த விசாரணை கடந்த மாதம் 16-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

நேற்று மாலை வரை தீர்ப்பு எப்போது வெளிவரும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. எனினும், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி ஒய்வு பெறும் நவ.17ம் தேதிக்கு முன்பாக இருக்கும் என்று மட்டும் பரவலாக கூறப்பட்டு வந்தது. இன்று காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்படுவதாக நேற்று இரவு திடீரென அறிவிப்பு வெளியானது. 

இந்த நிலையில், இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்படி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் கோயில் கட்டுவதற்கு அனுமதி கிடைத்திருக்கிறது. இஸ்லாமியர்கள் தரப்பில் வழக்குத்  தொடர்ந்த வக்ப் வாரியத்திற்கு மாற்று இடமாக 5 ஏக்கர் வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

.