This Article is From Aug 07, 2020

‘அயோத்தி மசூதி தொடக்க விழாவில் பங்கேற்க மாட்டேன்’- சர்ச்சையாகும் யோகி ஆதித்யநாத்தின் பேச்சு!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அயோத்தி நில பிரச்னை வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

‘அயோத்தி மசூதி தொடக்க விழாவில் பங்கேற்க மாட்டேன்’- சர்ச்சையாகும் யோகி ஆதித்யநாத்தின் பேச்சு!

உச்ச நீதிமன்றம், ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதியளித்தது. 

ஹைலைட்ஸ்

  • 'ஒரு இந்துவாக என்னால் மசூதி திறப்புக்குப் போக முடியாது'
  • ஆதித்யநாத்தின் பேச்சைக் கண்டித்துள்ளது சமாஜ்வாடி கட்சி
  • காங்கிரஸ் தரப்பு, ஆதித்யநாத் கருத்து பற்றி ஏதும் பேசவில்லை
Lucknow:

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அயோத்தியில் திறக்கப்பட உள்ள மசூதியின் தொடக்க விழாவில் பங்கேற்க மாட்டேன் என்று பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி வலியுறுத்தியுள்ளது. 

சமீபத்தில், அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், பேட்டியளித்த ஆதித்யநாத், “ஒரு முதல்வராக, எனக்கு எந்த நம்பிக்கை கொண்டவர்கள் மீதோ, மதத்தின் மீதோ, சமூகத்தின் மீதோ பிரச்னை இல்லை. அதே நேரத்தில் ஒரு யோகியாக, மசூதியின் தொடக்க விழாவுக்கு நான் போக மாட்டேன். ஒரு இந்துவாக எனக்கு உகந்ததை செய்யும் உரிமை உள்ளது.

நான் மசூதி விவகாரத்தில் எந்த விதத்திலும் சம்பந்தப்பட்டவன் இல்லை. அதனால்தான், அந்த தொடக்க விழாவுக்கு நான் அழைக்கப்படவும் மாட்டேன். நான் போகவும் மாட்டேன் எனக் கூறுகிறேன்.

அப்படி அவர்கள் என்னை அழைத்தால், மதச்சார்பின்மைக்கு ஆபத்து வரும். ஆகவே, மதச்சார்பின்மைக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் பாரபட்சமின்றி கிடைக்கப் பெற தொடர்ந்து பணி செய்வேன்” என்று கூறினார். 

அவர் மேலும், “இஃப்தார் நோம்புகளில் தொப்பி போட்டுக் கொண்டு கலந்து கொள்வது மதச்சார்பின்மை கிடையாது. அது போலியானது என்பது மக்களுக்குத் தெரியும். உண்மை என்னவென்பது அவர்களுக்குத் தெரியும். ராமர் கோயிலைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி, எந்த முடிவும் வந்துவிடக் கூடாது என்று நினைத்தது. பிரச்னை தீர்ந்துவிடக் கூடாது என்று நினைத்தது. அரசியலுக்காக அவர்கள் அப்படி நினைத்தார்கள்” என முடித்தார். 

இதைத் தொடர்ந்து சமாஷ்வாடி கட்சி, “யோகி ஆதித்யநாத், ஒரு மாநிலம் முழுவதற்கும் முதல்வர் ஆவார். இந்து சமூகத்துக்கு மட்டும் அவர் முதல்வர் அல்ல. இப்படி இருக்கையில், அவரின் வார்த்தைகள் கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. அவரின் பேச்சுக்காக மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது. 

உத்தர பிரதேச காங்கிரஸ் தரப்போ, ஆதித்யநாத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து கருத்துக் கூற மறுப்புத் தெரிவித்து விட்டது. 

கடந்த புதன் கிழமை, அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடந்தது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், அயோத்தி நில பிரச்னை வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றம், ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதியளித்தது. 

தீர்ப்பில், அயோத்தியில் மசூதி கட்டிக் கொள்ள இன்னொரு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டது. 1992 ஆம் ஆண்டு அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர்தான், பிரச்னை எழுந்து வழக்குத் தொடரப்பட்டது. தற்போது மசூதி கட்ட சன்னி வக்ஃப் போர்டு மூலம் அறைக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. 

.