குடிநீர் வரிபாக்கி செலுத்துவதற்கான தாமதக் கட்டணங்களை 100 சதவீதம் தள்ளுபடி செய்வதாக கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
New Delhi: டெல்லியில் நவ.30ஆம் தேதி வரை 100 சதவீதம் குடிநீர் வரிப்பாக்கியை செலுத்துவதற்கான தாமதக் கட்டணத்தை தள்ளுபடி செய்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். புதிய தண்ணீர் இணைப்பு பெற்றவர்களுக்கும் இந்த வரிபாக்கி தள்ளுபடி பொருந்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரிவிந்த் கெஜ்ரிவால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து அவர் பேசும் போது, கடந்த 2015ல் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது, குடிநீர் நிலை மிகவும் மோசமானதாக இருந்தது. அப்போது நான் பிரச்சாரம் மேற்க்கொண்ட போது, வீட்டிற்கு வெளியே மக்கள் குடிநீர் வரி ரசீதுடன் நின்றுக்கொண்டிருந்தனர் என்றார்.
மேலும் அவர் கூறும்போது, அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை E,F,G மற்றும் H பரிவுகளின் கீழ் உள்ள ஏறத்தாழ 10.5 லட்சம் மக்களுக்கு அனைத்து குடிநீர் வரிகளும் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
A மற்றும் B பிரிவுகளின் கீழ் உள்ள மக்களுக்கு 25 சதவீதம் வரி தள்ளுபடியும், C பிரிவுகளின் கீழ் உள்ள மக்களுக்கு 50 சதவீத வரி தள்ளுபடியும், D பிரிவுகளின் கீழ் உள்ள மக்களுக்கு 75 சதவீத வரி தள்ளுபடி செய்யப்படுவதாக அறவித்துள்ளார்.
இதேபோல், குடிநீர் வரிபாக்கியை தாமதமாக செலுத்தும் கட்டணமும் 100 சதவீதம் தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். எனினும், இது ஒவ்வொரு பிரிவுகளுக்கும் ஏற்றபடி தள்ளுபடி உட்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி குடிநீர் வாரியத்திற்கு குறைந்தபட்சம் 13.5 லட்சம் பேர் குடிநீர் வரிபாக்கி வைத்துள்ளனர். இதற்கான தாமதமாக செலுத்தும் கட்டணத்தை தள்ளுபடி செய்து மக்களை வரிபாக்கியை செலுத்த ஊக்கப்படுத்துவதன் மூலம் டெல்லி குடிநீர் வாரியத்திற்கு ரூ.600 கோடி கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த நிலையில், மக்களுக்கு தண்ணீர் கூட இல்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. எனினும், கடந்த சில ஆண்டுகளில் நீர் நிலைமையை நாங்கள் மேம்படுத்தியுள்ளோம். 58 சதவீத காலனிகளில் நீர் குழாய்கள் இருக்கின்றன. ஆனால், மற்றவர்கள் டேங்கர்களையே பயன்படுத்துகின்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, வரும் அக்டோபர் 29 முதல் டெல்லியில் உள்ள அனைத்து பொது போக்குவரத்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்த நிலையில், தற்போது தண்ணீர் வரி தள்ளபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.