அருண் ஜெட்லி உடல்நிலை அறிய எய்ம்ஸ் மருத்துவமனை சென்றார் வெங்கய்யா நாயுடு.
New Delhi: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இரவில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலர் நேற்று இரவே மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். மருத்துவமனை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், அருண் ஜெட்லியின் உடல்நிலையை மருத்துவர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனை சென்று அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். இதுதொடர்பாக துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் அலுவலகம் ட்வீட்டரில் கூறியதாவது, மருத்துவ சிகிச்சைக்கு அருண் ஜெட்லி ஒத்துழைப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்ததாக அதில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, புதிதாக அமைக்கப்படும் மத்திய அமைச்சரவையில் மீண்டும் தொடர விரும்பவில்லை என அருண் ஜெட்லி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், அதில் அனைத்து பொறுப்புகளிருந்தும் சிறிது காலம், விலகி இருக்க விரும்புகிறேன். இது எனது சிகிச்சையிலும், ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த உதவும் என்று அவர், கோரிக்கை விடுத்திருந்தார்.