This Article is From Aug 10, 2020

நீதிமன்ற அவமதிப்பு குறித்து பிரபல வழக்கறிஞரின் விளக்கத்தை ஏற்க நீதிபதிகள் மறுப்பு!

பூஷனுக்கு எதிரான மற்றொரு அவமதிப்பு மனுவை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம், இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பற்றிய பூஷனின் கருத்துகளுக்கு, "சுதந்திரமான பேச்சுக்கும் அவமதிப்புக்கும் இடையில் ஒரு கோடு இருக்கிறது.” என கூறியுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு குறித்து பிரபல வழக்கறிஞரின் விளக்கத்தை ஏற்க நீதிபதிகள் மறுப்பு!

பிரசாந்த் பூஷன் 2009 ஆம் ஆண்டு தெஹல்கா பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது நீதிபதிகள் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்

ஹைலைட்ஸ்

  • பூஷன் 2009ம் ஆண்டு தெஹல்கா பத்திரிகைக்கு சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார்
  • இந்தியாவின் 16 தலைமை நீதிபதிகளில் பாதி பேர் ஊழல் மிக்கவர்கள் என கூறினார்
  • நீதிமன்ற அவமதிப்பு வழக்காக உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது
New Delhi:

உச்ச நீதிமன்ற பிரபல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரசாந்த் பூஷன் 2009 ஆம் ஆண்டு தெஹல்கா பத்திரிகைக்கு அளித்த பேட்டியின் போது இந்தியாவின் 16 தலைமை நீதிபதிகளில் பாதி பேர் ஊழல் மிக்கவர்கள் என குறிப்பிட்டிருந்தார். பூஷனின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கத் தொடங்கியது.

தற்போது இந்த வழக்கில் பூஷனின் விளக்கத்தையும் வருத்தத்தையும் ஏற்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. ஊழல் குறித்து பிரசாந்த் பூஷனின் கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்புக்கு உட்பட்டதா என்பதை சரிபார்க்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கை நீதிமன்றம் அடுத்த திங்கட்கிழமை மீண்டும் விசாரிக்கும்.

“ஊழல் தொடர்பான அறிக்கைகள் நீதிமன்ற அவமதிப்புக்கு சமமானதா என்பதை நாங்கள் சரிபார்க்க வேண்டும். எனவே இந்த விஷயத்தை நாங்கள் விசாரிக்க வேண்டும்.” என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

பூஷனுக்கு எதிரான மற்றொரு அவமதிப்பு மனுவை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம், இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பற்றிய பூஷனின் கருத்துகளுக்கு, "சுதந்திரமான பேச்சுக்கும் அவமதிப்புக்கும் இடையில் ஒரு கோடு இருக்கிறது.” என கூறியுள்ளது.

முந்தைய விசாரணையில், “நான் சொன்னது உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எவருக்கும் எந்த வகையிலும் புண்படுத்தியதாக இருந்தால் நான் மன்னிப்புக் கோருகிறேன். ஊழல் என்ற சொல் பரந்த அர்த்தத்தில் தனியுரிமையின்மை என்பதில் பயன்படுத்தப்பட்டது. நான் நிதி ஊழலை குறிக்கவில்லை.” என பூஷன் விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

.