This Article is From May 20, 2020

நாடு முழுவதும் பயணிகள் ரயில் சேவையை துவங்குகிறது ரயில்வே! முதற்கட்டமாக 200 ரயில்கள் இயக்கம்!!

ஜூன் 1 முதல் 200 பயணிகள் ரயில் நாடு முழுவதும் இயக்கப்படும் என்றும், இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும், இது ஏசி வகுப்புகள் அல்லாத ரயில்களாக இருக்கும் என ரயில்வே துறை டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

Passenger train service will expand from the existing 15 trains to more than 200 from next month

New Delhi:

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஒரு லட்சத்தினை கடந்திருக்கக்கூடிய நிலையில், தற்போது முழு முடக்க நடவடிக்கையானது இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது, ஜூன் 1 முதல் பயணிகளுக்கான ரயில் சேவையை நாடு முழுவதும் தொடங்கிட ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக ஜூன் 1 முதல் 200 பயணிகள் ரயில் நாடு முழுவதும் இயக்கப்படும் என்றும், இதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும், இது ஏசி வகுப்புகள் அல்லாத ரயில்களாக இருக்கும் என ரயில்வே துறை டிவிட்டரில் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே நாடு முழுவதும் சிக்கித் தவித்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு 366 சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கியுள்ளது. பயணிகள் ரயிலை பொறுத்த அளவில் குறிப்பிட்ட வழித்தடங்களில் 15 ரயில்களை இயக்கியது. இதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப்புகளை ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில் மே 22 முதல் முன்பதிவு செய்தவர்களுக்கான காத்திருப்பு பட்டியல் வெளியிடப்படும் என ரயில்வே முன்னதாக குறிப்பிட்டிருந்தது.

தற்போது நடைமுறையில் உள்ள முழு முடக்க நடவடிக்கையில் எந்தெந்த சேவைகளை மாநிலங்கள் அனுமதிக்கலாம் என்கிற முடிவுகளை மாநில அரசுகளே  மேற்கொள்ள மத்திய அரசு அனுமதித்திருந்தது.

புலம் பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் சேவையில் பல விமர்சனங்கள் முன்னெழுந்தன. கர்நாடகா உட்பட சில மாநிலங்கள் வெளிப்படையாகவே இந்த ரயில் சேவையை எதிர்த்தன. இதன் காரணமாக தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் விமர்சனங்களை மாநிலங்கள் முன்வைத்தன. ரயில் கட்டணம் குறித்த காங்கிரஸ் பெரிய அளவில் விமர்சனத்தினை முன் வைத்திருந்தது. புலம் பெயர் தொழிலாளர்களுக்கான கட்டணத்தை காங்கிரஸ் ஏற்கும் என அக்கட்சி தலைவர் சோனியா காந்தி அறிவித்த பின்னர், புலம் பெயர் தொழிலாளர்களின் குறிப்பிட்ட அளவு கட்டணத்தை ரயில்வே ஏற்பதாக ரயில்வேதுறை அறிவித்தது.

முழு முடக்க நடவடிக்கை தொடங்கப்படுவதற்கு முன்னர் இந்திய ரயில்வே நாள்தோறும் சுமார் 12 ஆயிரம் ரயில்களை இயக்கிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

.