This Article is From Aug 07, 2018

‘எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரை சந்தித்ததால் தகுதி நீக்கம்!’- சபாநாயகர் தனபால்

18 எம்.எல்.ஏ-க்களையும் தன் அதிகாரத்தை வைத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்தார் தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால்

‘எம்.எல்.ஏ-க்கள் ஆளுநரை சந்தித்ததால் தகுதி நீக்கம்!’- சபாநாயகர் தனபால்

அதிமுக-விலிருந்து 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து, தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால், ‘சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்தது தங்களது தகுதி நீக்கம் குறித்து முறையிட்டதே, தகுதி நீக்கம் செய்வதற்கு உகந்தது’ என்று நீதிமன்றத்தில் கருத்து கூறியுள்ளார். 

அதிமுக-வில் சென்ற ஆண்டு, சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஈ.பி.எஸ் அணி பிரிந்தது. சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பி.எஸ் அணி தனியாக சென்றது. சிறிது காலம் கழித்து ஓ.பி.எஸ் அணியும் ஈ.பி.எஸ் அணியும் ஒன்றாக இணைந்தது. ஆனால், தினகரனுக்கு நெருக்கமாக இருந்த 18 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடிக்கு எதிராக அப்போது ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம், கடிதம் அளித்தனர். அந்தக் கடிதத்தில், 'முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்' என்று கூறினர்.

முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர் என்ற காரணத்தை முன் வைத்து, 18 எம்.எல்.ஏ-க்களையும் தன் அதிகாரத்தை வைத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகுதி நீக்கம் செய்தார் தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால். இதை எதிர்த்து 18 சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

அதில் இரு வேறு தீர்ப்புகள் வரவே, தற்போது மூன்றாவது நீதிபதி வழக்கை விசாரித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சபாநாயகர் தனபால் சார்பில் ஆஜரான ஆர்யமா சுந்தரம், ’தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள், கட்சியில் அவர்களது முரண்பாடுகள் குறித்து தெரிவித்ததாக கூறுகின்றனர். ஆனால், கட்சி அவர்களின் கோரிக்கைகளை மறுத்துவிட்டது. இதையடுத்துதான் அவர்கள் ஆளுநரை சந்தித்துள்ளனர். கட்சிக்கு கட்டுப்படாமல் அவர்கள், அதைவிட்டு வெளியேறி ஆளுநரிடம் புகார் கூறியுள்ளனர். எம்.எல்.ஏ-க்கள், முதல்வரை மாற்றச் சொல்லி ஆளுநரை அணுக முடியாது என்று சட்டம் தெளிவாக கூறியுள்ளது. இதை வைத்துப் பார்த்தால் அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்டுள்ளனர் என்பது தெரிகிறது. இதுவே தகுதி நீக்கம் செய்வதற்கு போதுமானது’ என்று வாதாடினார். 

இதையடுத்து வழக்கை விசாரித்து வரும் நீதிபதி எம்.சத்யநாரயணன், வழக்கு விசாரணையை 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

தொடர்ந்து இரு தரப்பு வாதமும் விசாரிக்கப்பட்டு வருகிறது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.