This Article is From Nov 05, 2019

மகாராஷ்டிராவில் நீடிக்கும் மோதல்: சிவசேனாவுக்கே முதல்வர் பதவி: சஞ்சய் ராவத் உறுதி!!

மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வாரங்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா மற்றும் பாஜக இடையே இறுதி முடிவு எட்டப்பட்டதாக தெரியவில்லை.

மகாராஷ்டிராவில் நீடிக்கும் மோதல்: சிவசேனாவுக்கே முதல்வர் பதவி: சஞ்சய் ராவத் உறுதி!!

சிவசேனாவை சேர்ந்தவரே முதல்வர் பதவி வகிப்பார் என சஞ்சாய் ராவத் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Mumbai:

மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்தவரே முதல்வர் பதவி வகிப்பார் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சாய் ராவத் உறுதியாக தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வாரங்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா மற்றும் பாஜக இடையே இறுதி முடிவு எட்டப்பட்டதாக தெரியவில்லை. 

இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினரும், சிவசேனாவின் மூத்த தலைவருமான சஞ்சய் ராவத் ஏஎன்ஐ செய்தியாளரிடம் கூறியதாவது, மகாராஷ்டிராவில் சிவசேனாவை சேர்ந்தவர் மட்டுமே முதல்வர் பதவி வகிப்பார். மகாராஷ்டிராவின் அரசியல் முகம் மாறுகிறது. நிச்சயம் நீங்கள் அதனை உணர்வீர்கள். இது நீதிக்கும், உரிமைக்குமான போராட்டம். இதில் நிச்சயம் சிவசேனா வெற்றி பெறும் என்று அவர் கூறினார். 

முன்னதாக நேற்று டெல்லியில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்நாவிஸ் பாஜக முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த இரு சம்பங்களையும் குறிப்பிடும் படி,  மகாராஷ்டிராவின் முடிவு மகாராஷ்டிராவிலே எடுக்கப்படும் என சஞ்சய் ராவத் கூறினார். 

மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் ஆட்சி காலம் வரும் சனிக்கிழமையுடன் முடிவடையும் நிலையில், அதற்குள் அங்கு புதிய ஆட்சி அமைய வேண்டும். அவ்வாறு புதிய ஆட்சி அமையவில்லை என்றால், அது குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது. 

மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 12 நாட்கள் கடந்த நிலையிலும், ஆட்சி அமைப்பது தொடர்பாக பாஜக மற்றும் சிவசேனா இடையே தொடர்ந்து, அதிகாரப்பகிர்வு மோதல் நடந்து வருகிறது. 50 சதவீத அதிகாரப்பகிர்வு, 2.5 வருடத்துக்கு சிவசேனாவுக்கு முதல்வர் பதவி, அமைச்சரவையில் சரிபாதி இடங்கள் என்ற திட்டத்தை சிவசேனா முன் வைத்துள்ளது. “லோக்சபா தேர்தலுக்கு முன்னர் 50:50 அதிகாரப் பகிர்வுக்கு அமித்ஷா ஒப்புக் கொண்டதாக சிவசேனா கட்சி கூறிவருகிறது. 

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா, மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ்தான், முதல்வராக தொடர வேண்டும் என்று கருதுகிறார்கள். இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க சிவசேனா தயாராகி வருகிறது. 

எனினும், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு எந்தவொரு ஆதரவையும் அளிக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மகாராஷ்டிர தேர்தலில் மொத்தம் இருக்கும் 288 தொகுதிகளில் 105 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக, தங்களிடம் 115 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்து வருகிறது. 56 தொகுதிகளை கைப்பற்றிய சிவசேனா 63 சுயேட்சை எம்எல்ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளது. எதிர்கட்சியான காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 102 இடங்கள் உள்ளன. 

இதனிடையே, இந்த விவகாரத்தில் சிவசேனா தற்போது ஆர்எஸ்எஸ் தலையீட்டை எதிர்நோக்கியுள்ளது. இதுதொடர்பான சிவசேனா மூத்த தலைவர் கிஷோர் திவாரி எழுதியுள்ள அந்த கடிதத்தில், கூட்டணி தர்மத்தை பாஜக கடைபிடிக்கவில்லை என்றும் இந்த விவகாரத்தில் மோகன் பகவத் தலையிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாஜக - சிவசேனா கூட்டணிக்கு மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்த நிலையிலும், பாஜக கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க மறுத்து வருகிறது. இதனால், மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தாமதமாகி வருகிறது. இதனால், ஆர்எஸ்எஸ் இந்த விவகாரத்தில் தலையிட்டு உடனடியாக பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

எனினும், ஆர்எஸ்எஸ் தரப்பில் இருந்த இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் இதுவரை வரவில்லை. தொடர்ந்து, தனது முடிவில் இருந்து சிவசேனாவும் பின்வாங்க மறுத்து வருகிறது.
 

.