விவசாயக் கழிவுகள் எரித்தல் (Stubble burninig), தீபாவளி பட்டாசு வெடிப்பினால் ஏற்பட்ட புகை மாசு உள்ளிட்டவையால் வட இந்தியாவின் பல மாநிலங்களும் காற்று மாசுவில் (Air Pollution) சிக்கித் தவித்தன. இன்னுமும் கூட தலைநகர் டெல்லி (Delhi) மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு அபாயகரமான நிலையில் தான் இருக்கிறது. டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுவின் பாதிப்பு தமிழக தலைநகர் சென்னையையும் (Chennai) விட்டுவைக்கவில்லை. சுமார் 10 நாட்களுக்கு முன்னர் சென்னையில் காற்றின் தரம் மிக மோசமானதாக இருந்தது. தற்போது அது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
சென்னை காற்று மாசு குறித்து, இந்திய வானிலை மைய தரப்பும், தமிழக அரசு தரப்பும் தொடர்ந்து மவுனம் காத்து வந்த நிலையில், தனியார் வானிலை வல்லுநர்கள், சென்னையில் காற்று மாசுவின் அளவு மிக மோசமாக இருக்கிறது என்று கூறினார்கள். காற்று மாசு குறித்தான விவாதம் தொடர்ந்து நடந்து வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் பரவலாக மழை பெய்தது. இதைத் தொடர்ந்து காற்று மாசுவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது.
இது குறித்து பிரபல வானிலை கணிப்பாளர், தமிழ்நாடு வெதர்மேன், பிரதீப் ஜான், “புல் புல் புயல் காரணமாகத்தான் வட இந்தியாவில் அதிகமாக இருந்த புகைமூட்டம் சென்னை நோக்கி திருப்பிவிடப்பட்டது. அதே நேரத்தில் தொடர்ந்து பெய்த மழை மற்றும் பல்வேறு காரணங்களால் காற்று மாசு குறைந்தது,” என்றார்.
காற்று மாசு குறித்து அதிக விவாதம் எழுந்த நிலையில், தமிழக அரசு தரப்பும், “காற்று மாசு பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். சென்னை மற்றும் தமிழக மக்கள் அது குறித்து கவலடைய வேண்டாம்,” என்று விளக்கம் கொடுத்தது.