This Article is From Dec 04, 2019

"விக்ரம் லேண்டரை ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டோம்": இஸ்ரோ சிவன்

கடந்த செப்.10ம் தேதி இஸ்ரோ தனது வலைதளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், விக்ரம் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் இருப்பது ஆர்பிட்டர் மூலம் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chandrayaan 2: "இஸ்ரோவின் ஆர்பிட்டரே விக்ரம் லேண்டரை கண்டறிந்தது," என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

Kishangarh/New Delhi:

விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை இஸ்ரோவின் ஆர்பிட்டர் ஏற்கனவே கண்டுபிடித்துவிட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க விண்வெளி ஆராய்சி மையமான நாசா நேற்றைய தினம் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க நாசாவுக்கு உதவியதாக சென்னை பொறியாளருக்கு நாசா நன்றி தெரிவித்ததை தொடர்ந்து, இன்று இஸ்ரோ சிவன் இவ்வாறு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இஸ்ரோ தலைவர் சிவன் அங்கு செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, 'இதைப்பற்றி நாங்கள் எதுவும் கூற விரும்பவில்லை.

இஸ்ரோவின் ஆர்பிட்டரே விக்ரம் லேண்டரை கண்டறிந்தது. இதுதொடர்பாக எங்களது வலைதளத்திலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் வலைதளத்திற்கு சென்று தகவல்களை பார்த்துக்கொள்ளலாம்' என்று அவர் கூறியுள்ளார். 

இதனிடையே, கடந்த செப்.10ம் தேதி இஸ்ரோ தனது வலைதளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், விக்ரம் லேண்டர் சந்திரனின் மேற்பரப்பில் இருப்பது ஆர்பிட்டர் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், லேண்டருடன் இதுவரை எந்த தொடர்பும் இல்லை. லேண்டருடனான தொடர்பை மீண்டு மேற்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுதொடர்பாக இஸ்ரோவில் அதிகாரப்பூர்வு ட்வீட்டர் பக்கத்திலும், கடந்த செப்.10ம் தேதியன்று, சந்திராயன் 2 ஆர்ப்பிட்டரின் மூலம் விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இதுவரை அதனுடன் எந்த தொடர்பும் கிடைக்கவில்லை என்று அதிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, சந்திரயான்2 விண்கலம் மூலம் நிலவின் தென் துருவத்தை ஆராய இஸ்ரோ சார்பில் விக்ரம் லேண்டர் அனுப்பப்பட்டது. நிலவில் தரையிரங்க 2 கிலோ மீட்டர் தொலைவே இருந்த நிலையில், லேண்டர் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. 

இதனையடுத்து லேண்டரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவிற்கு, அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா உதவியது. எனினும், விக்ரம் லேண்டரின் நிலை என்ன என்பது குறித்து நாசாவின் விண்கலத்தாலும் கண்டறிய முடியவில்லை. 

இதைத்தொடர்ந்து, நாசா கடந்த செப்.26ம் தேதி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. மேலும், அதில் விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டறிய, லேண்டர் தரையிரங்கும் முன் அதே பகுதியில் எடுத்த புகைப்படங்களையும், இந்த புகைப்படங்களையும் ஒப்பிட்டு அடையாளப்படுத்தும்படி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தது. 

இதையடுத்து, சென்னையை சேர்ந்த சண்முக சுப்ரமணியன் என்ற ஐடியில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் நாசாவின் புகைப்படங்களை ஆராய்ந்து, முதல்முறையாக லேண்டர் இருப்பதற்கு சாதகமான அடையாளத்தை கண்டுபிடித்ததாக தனது ட்வீட்டரில் தெரிவித்துள்ளார். 

சண்முக சுப்பிரமணியன் அளித்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்டு அந்த இடத்தை ஆய்வு செய்ததன் அடிப்படையில் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கூறிய இடத்தில் இருப்பதை நாங்கள் உறுதி செய்தோம் என நாசா தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்ரம் லேண்டர் விபத்துக்குள்ளான இடத்திலிருந்து 750 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளதை முதன்முதலாக சண்முக சுப்பிரமணியன் என்ற இளைஞர் கண்டறிந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.

(With inputs from ANI)

.