சமீபத்தில் வெளியான நீதிமன்ற ஆவணம் ஒன்றில், அவர் ஒரு வாரத்துக்கு 1000 பவுண்டுகள் வரை மளிகை பொருட்களுக்கு செலவழிக்கிறார் என்று கூறப்பட்டிருந்தது.
London: இந்திய வங்கிகளிடம் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்து தப்பித்துச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை அந்நாட்டிலிருந்து வெளியேற்ற சென்ற ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக இங்கிலாந்து உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார் மல்லையா. தற்போது அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கிவிட்டு, திருப்பி செலுத்தாத குற்றத்திற்காக தேடப்பட்டு வரும் நபர் மல்லையா. அவருக்கு எதிராக சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி, இங்கிலாந்து மேஜிஸ்டிரேட் நீதிபதி தீர்ப்பளித்தார். மல்லையா வழக்கை விசாரித்த நீதிபதி, ‘பண மோசடி வழக்கில் இந்தியாவில் தேடப்பட்டு வரும் நபராக இருக்கிறார் மல்லையா. அது குறித்து அவர் பதில் சொல்லியே ஆக வேண்டும்' என்று கூறினார்.
தொடர்ந்து தனது சொத்துகளை விஜய் மல்லையா இழந்து வருகிறார். ஆனால், சமீபத்தில் அவரது வழக்கறிஞர்கள், ‘மல்லையா, தான் வாங்கிய கடனை திரும்ப செலுத்த தயாராக இருக்கிறார்' என்று கூறினார்கள்.
தன் மீது எக்கச்சக்க கடன்கள் நிலுவையில் இருந்தாலும், மல்லையா தொடர்ந்து மிகவும் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒரு வாரத்துக்கு மல்லையா, 18,300 பவுண்டுகளை தனக்காக செலவு செய்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான நீதிமன்ற ஆவணம் ஒன்றில், அவர் ஒரு வாரத்துக்கு 1000 பவுண்டுகள் வரை மளிகை பொருட்களுக்கு செலவழிக்கிறார் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், மல்லையாவுக்கு எதிராக தொடர்ந்து அழுத்தம் அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் தேதி அவர், ‘தப்பியோடிய குற்றவாளி' என்று முத்திரைக் குத்தப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வர, மத்திய அரசு தரப்பு தொடர்ந்து முயன்று வருகிறது.