This Article is From Dec 14, 2018

''மல்லையாவை திருடன் என்று அழைப்பது முறையல்ல''- மத்திய அமைச்சர் பேச்சு

விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவர முயற்சிகள் நடந்து வரும் நிலையில் மத்திய பாஜக அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

''மல்லையாவை திருடன் என்று அழைப்பது முறையல்ல''- மத்திய அமைச்சர் பேச்சு

மல்லையாவை மோசடி மன்னன் என்று கூறினால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையாது என்கிறார் நிதின் கட்கரி

Mumbai:

வங்கிகளில் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியாத ஒருவரை திருடன் என்று அழைப்பது சரியல்ல என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். தொழில் அதிபர் விஜய் மல்லையாவை சுட்டிக்காட்டி அமைச்சர் இவ்வாறான பதிலை தெரிவித்திருக்கிறார்.

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடனை வாங்கி விட்டு தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்து தப்பிச் சென்று விட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் சட்ட சிக்கல்கள் இருந்தன. இதையடுத்து நீதிமன்றத்தை அணுகி, அதில் வெற்றி பெற்றுள்ள மத்திய அரசை மல்லையாவை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, மல்லையா விவகாரம் குறித்து பேசினார். அவர் பேசுகையில், ''கடந்த 40 ஆண்டுகளாக விஜய் மல்லையா வங்கிகளில் கடன் பெற்று அதற்கு வட்டியும் முதலும் கட்டி வந்துள்ளார். விமான போக்குவரத்து துறையில் அவர் நுழைந்த பிறகுதான் அவருக்கு பிரச்னைகள் ஏற்பட்டன. உடனே அவரை திருடன் என்று அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

ஒருவர் கடந்த 40 ஆண்டுகளாக வங்கிகளில் கடனை பெற்று அதனை திரும்ப செலுத்தி வருகிறார். தற்போது பிரச்னை காரணமாக கடனை திரும்ப செலுத்துவதில் மல்லையாவுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக அவரை திருடன் என்று அழைப்பது முறையல்ல.'' என்று பேசினார்.
 

.