This Article is From Jul 03, 2019

மக்கள் விரும்பாத எந்த திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது: ஜெயக்குமார்

மக்கள் விரும்பாத எந்த திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மக்கள் விரும்பாத எந்த திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்காது: ஜெயக்குமார்

தமிழகத்தின் 23 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னிறுத்தப்பட்டு வருகின்றன.

கடும் எதிர்ப்பு நிலவி வரும் இந்த சூழ்நிலையிலும், தமிழகத்தின் எதிர்ப்பை மீறி நாகை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், முதற்கட்ட பணியாக 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் அமைக்கும் பணியை தொடங்கலாம் எனவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வன்மையாக கண்டித்து வரும் நிலையில், இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

மக்கள் விரும்பும் எந்த ஒரு திட்டத்திற்கும் அரசின் ஆதரவு உண்டு என முதல்வரே கூறியுள்ளார். ஆனால், மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்திற்கும் அரசின் ஆதரவு கிடையாது என்று முதல்வர் கூறியதையே நானும் கூறுகிறேன் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், டிடிவி தினகரன் எதற்கும் பயன்படாத கருவேல மரம். தனிமரம் தோப்பு ஆகாது என்பது டிடிவி தினகரன் விவகாரத்தில் நிரூபணம் ஆகியுள்ளது.

சசிகலா, தினகரனை தவிர வேறு யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக் கொள்வோம் என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

.