This Article is From Aug 24, 2019

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்! எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!!

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி (66), மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமைனயில் கடந்த 2 வாரத்திற்கு முன்பாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்! எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது!!

நீண்ட நாள் உடல்நலக்குறைவு அருண் ஜெட்லியின் உயிரை பறித்துள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இன்று காலமானார். 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண் ஜெட்லி கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். மூச்சுத் திணறல் பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மறுநாளே மோசமான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். அப்போதிருந்து ஜெட்லியின் உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியாகவில்லை.

இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். 

தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்திருக்கிறது. 

உடல்நல பாதிப்பு தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிடுவதை அருண் ஜெட்லி தவிர்த்தார். அவரை மாநிலங்களவை எம்.பி.யாக்கி அமைச்சரவையில் இடபெற வைக்க வேண்டும் என்ற முடிவில் பாஜக இருந்ததாக கூறப்பட்டது. அதனையும் உடல்நிலையை காரணம் காட்டி அருண் ஜெட்லி தவிர்த்திருந்தார். 

நீண்ட நாட்களாக அருண் ஜெட்லிக்கு சர்க்கரை வியாதி இருந்தது. இதனால் அவரது உடல் எடை அதிகரித்ததை தொடர்ந்து, கடந்த 2014-ல் உடல் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சையை ஜெட்லி செய்து கொண்டார். 

உடல்நிலை மோசம் அடைந்ததால் 2018, ஆகஸ்ட் 23-ம்தேதியுடன் அமைச்சக பொறுப்பில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டார். ஜெட்லியின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அருண் ஜெட்லிக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். 

.