டெல்லி அமலாக்கத்துறை முன்பு ராபர்ட் வதோரா ஆஜரானார்.
New Delhi: பணமோசடி வழக்கு தொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதோரா ஆஜரானார். இதுதொடர்பாக கடந்த வாரம் ராபர்ட் வதோரா முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றம் வரும் 16-ம் தேதி வரை அவரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
வதோராவின் மனைவி பிரியங்கா காந்தி வதோரா கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நேரடி அரசியலில் இறங்கினார். இதைத்தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதுதொடர்பாக வதோரா கூறும்போது, அரசியல் காரணங்களுக்காக தன் மீது தேவையற்ற, நியாயமற்ற மற்றும் தீங்கிழைக்கும் குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது என்றார்.
பிரிட்டன் தலைநகர் லண்டனில் சுமார் 19 லட்சம் பவுண்டுகள் மதிப்பிலான சொத்து ஒன்றை வாங்கிய ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா என்பவருடன் சேர்ந்து இந்த தொகையை கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் மூலம் செலுத்தியதாக மத்திய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
அதில், வதோராவுக்கு அந்த சொத்துகள் எப்படி வந்தது என்பதை மட்டும் எங்களிடம் விளக்கம் வேண்டும் என அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இவ்விவகாரத்தில் ராபர்ட் வதேரா முன் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது வரும் 6-ம் தேதி நடைபெறும் விசாரணையில் ராபர்ட் வதேரா கலந்து கொள்வார். அவருக்கு முன் ஜாமின் அளிக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் வாதாடினார். இந்நிலையில், வாக்குறுதியின்படி ராபர்ட் வதேரா தனது வழக்கறிஞருடன் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார்.