மே 15 ஆம் தேதிக்கு முன்னர் தங்களின் கோரிக்கைகளை மாநில அரசு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
New Delhi: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் போடப்பட்டுள்ள நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு, மே 17 ஆம் தேதியோடு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ஊரடங்கு அமல் செய்ததிலிருந்து நேற்று 5வது முறையாக மாநில முதல்வர்களை வீடியோ கான்ஃபரென்சிங் மூலம் சந்தித்து உரையாடியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. சுமார் 6 மணி நேரம் முதல்வர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் உரையாற்ற உள்ளார்.
நேற்றைய சந்திப்பின்போதே பிரதமர் மோடி, ஊரடங்கு உத்தரவு தொடரும் என்றும், அதே நேரத்தில் மிக குறைந்த கட்டுப்பாடுகளே விதிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
"முதல் ஊரடங்கு உத்தரவின்போது தேவைப்பட்ட கட்டுப்பாடுகள், இரண்டாவது முறை தேவையில்லை என்று உறுதியாக நம்பினேன். அதேபோலத்தான் மூன்றாவது முறை ஊரடங்கின்போது போடப்பட்ட கட்டுப்பாடுகள் நான்காவது முறை தேவைப்படாது என்று நம்புகிறேன்," என்று முதல்வர்களுடனான சந்திப்புக்குப் பின்னர் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார் பிரதமர்.
மே 17-க்குப் பிறகு கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இரவில் ஊரடங்கு, பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மே 15 ஆம் தேதிக்கு முன்னர் தங்களின் கோரிக்கைகளை மாநில அரசு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.