This Article is From Sep 04, 2018

‘ஒரு அப்பாவி ‘பாசிசம்’ என்ற சொல்லை பயன்படுத்த மாட்டார்!’- தமிழிசை கருத்து

சோஃபியா, இதற்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்கு எதிராகவும் போராடினார்

‘ஒரு அப்பாவி ‘பாசிசம்’ என்ற சொல்லை பயன்படுத்த மாட்டார்!’- தமிழிசை கருத்து
Chennai:

பாஜக-வுக்கு எதிராக அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் கோஷம் எழுப்பிய மாணவி கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சோஃபியா என்ற அந்தப் பெண்ணுக்கு எதிராக புகார் செய்தது குறித்து தமிழிசை, தனது தரப்பு வாதங்களை தெரிவித்துள்ளார்.

லூயிஸ் சோஃபியா என்கின்ற 28 வயது ஆராய்ச்சி மாணவியும் தமிழிசையும் சென்னையிலிருந்து தூத்துக்குடி வரும் விமானத்தில் ஒன்றாக சென்றுள்ளனர். அப்போது சோஃபியா, ‘மோடி- ஆர்.எஸ்.எஸ் - பாஜக ஒழிக’ என்று கோஷம் எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமானம் தூத்துக்குடியில் தரையிறங்கியவுடன் சோஃபியா கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானம் தரையிறங்கிய பின்னர் தமிழிசை பேசும் ஒரு வீடியோ பதிவாகியுள்ளது. அதில் அவர், ‘இது ஒன்றும் பொது இடம் அல்ல. அவர் எப்படி கோஷம் எழுப்பலாம்? அவருக்கு சில அடிப்படைவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம். அவர் சாதாரண பயணி போல தெரியவில்லை. நான் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டேன்’ என்று கோபமாக பேசுகிறார்.

இதையடுத்து போலீஸ் சோஃபியாவை கைது செய்தது. அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

அதேபோல சோஃபியாவின் தந்தை சாமி, தமிழிசைக்கு எதிராக ஒரு புகார் அளித்துள்ளார். ஆனால், அது வழக்காக பதிவு செய்யப்படவில்லை.

n3s8ms98

சோஃபியா, இதற்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், சென்னை - சேலம் 8 வழிச் சாலைக்கு எதிராகவும் போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் சோஃபியா, ‘நான் தமிழிசை சௌந்தரராஜனுடன் விமானத்தில் சென்று கொண்டிருக்கிறேன். இப்போது, ‘மோடி - ஆர்.எஸ்.எஸ் - பாஜக ஒழிக’ என்று கத்தினால் விமானத்திலிருந்து கீழே இறக்கிவிடப்படுவேனா?’ என்று பதிவிட்டார்.

இந்நிலையில் சோஃபியாவின் கைது குறித்து விஸ்வரூபம் எடுத்து வரும் இந்த விவகாரம் குறித்தும் தமிழிசை, ‘அவர் என் முன்னால் வந்து கத்தினார். அதற்கு அவர், இது என் பேச்சுரிமை என்று கூறினார். அவர் தொடர்ந்து இந்தக் கருத்தை கூறினார். ஆனால், நான் விமானத்தில் அமைதி காத்தேன். எந்த ஒரு அப்பாவிப் பெண்ணும் பாசிசம் என்ற சொல்லை பயன்படுத்தமாட்டார். என்னைப் பற்றியும் நான் சார்ந்த கட்சி பற்றியும் அவர் தொடர்ந்து அவதூறாக கூச்சலிட்ட போதும் நான் மற்ற பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு எதுவும் பேசவில்லை. நான் எனது கருத்துரிமையைப் பயன்படுத்தினால் அவர் தாங்க முடியுமா?’ என்று கொதி கொதித்துள்ளார்.

.