This Article is From Jan 01, 2019

ராமர் கோயில் விவகாரம்: பிரதமர் மோடி பரபரப்பு கருத்து!

ராமர் கோயில் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை ஜனவரி 4 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 

ராமர் கோயில் விவகாரம்: பிரதமர் மோடி பரபரப்பு கருத்து!

‘ராமர் கோயில் விவகாரத்துக்கு சட்டத்துக்கு உட்பட்டு தீர்வு காணப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் நாங்கள் தெளிவாக கூறியிருந்தோம்’ என்றுள்ளார் மோடி

ராமர் கோயில் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ‘ராமர் கோயிலைப் பொறுத்தவரை, நீதிமன்றம் என்ன முடிவு சொல்கிறது என்பது தெரியாமல் அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுக்க முடியாது' என்று கருத்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும், ‘ராமர் கோயில் விவகாரத்துக்கு சட்டத்துக்கு உட்பட்டு தீர்வு காணப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் நாங்கள் தெளிவாக கூறியிருந்தோம்' என்றுள்ளார். 

அவர் மேலும், ‘நீதிமன்ற வழிகாட்டுதலுக்குப் பிறகு, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை இந்த அரசாங்கம் விரைந்து செய்யும். ராமர் கோயில் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் தேவையற்றத் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்கள் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும். தேசிய அமைதிக்காக காங்கிரஸ் இதை நிறுத்திக் கொள்ள வேண்டும்' என்றுள்ளார்.

ராமர் கோயில் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணை ஜனவரி 4 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 

அயோத்தியில் ராமஜென்ம பூமி உரிமை தொடர்பான வழக்கு நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. இந்த சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் பரப்பளவிலான வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில் தொடர்புடைய சன்னி வக்ப் வாரியம், நிர்மோஹி அக்ஹாரா மற்றும் ராம் லீலா அமைப்பினர் ஆகிய மூன்று தரப்பினரும் மேற்படி நிலத்தை சரி சமமாக பகிர்ந்து கொள்ளலாம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது விரைவாக விசாரணை நடத்தி இந்த நிலம் யாருக்கு சொந்தமானது? என தீர்ப்பளிக்க வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் முன்னர் நிராகரித்து விட்டது.

இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, வழக்கு விசாரணை தேதி குறித்து ஜனவரி மாதம் முடிவெடுக்கப்படும் என உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்துதான் ஜனவரி 4 ஆம் தேதி, வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

உச்ச நீதிமன்றம் விசாரணை ஒரு புறம் இருந்தாலும், பாஜக-வின் சில உறுப்பினர்களும் வலதுசாரி அமைப்புகளும், ‘ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக பாஜக அரசு அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்' என்று வலியுறுத்தி வருகின்றன. 

.