This Article is From Sep 17, 2018

இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டதை வேடிக்கை பார்த்த 5 போலீசார் கைது

மணிப்பூரில் இரு சக்கர வாகனத்தை திருடினார் என்ற சந்தேகத்தின்பேரில் பரூக் கான் என்ற இளைஞர் ஒருவர் கடந்த வியாழன்று அடித்துக் கொல்லப்பட்டார்.

படுகாயமடைந்த இளைஞனை போலீசார் அந்த இடத்திலேயே விட்டுச் சென்றனர்

ஹைலைட்ஸ்

  • இருசக்கர வாகன திருடன் என்ற சந்தேகத்தின்பேரில் தாக்கப்பட்டார்
  • இளைஞர் தாக்கப்படுவதை போலீசார் வேடிக்கை பார்த்தனர்
  • ஐ.ஆர்.பி. கான்ஸ்டபிள் உள்பட மொத்தம் 5 பேர் கைது
Guwahati:

மணிப்பூரில் கடந்த வியாழன் அன்று நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்றைய தினம் தரோஜாம் பகுதியில் இருசக்கர வாகன திருடன் என்ற சந்தேகத்தின்பேரில் பரூக் கான் என்ற இளைஞரை பொதுமக்கள் தாக்கினர். இதனை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்தனர். படுகாயம் அடைந்த 26 வயது இளைஞர், பின்னர் உயிரிழந்தான்.

இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவுசெய்தவர்கள் அதனை வெளியிட்டனர். இதையடுத்து வீடியோ வைரலாக மாறிப்போனது. இந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுத்துள்ள மணிப்பூர் போலீசார் மொத்தம் 5 பேரை சஸ்பெண்ட் செய்து கைது செய்துள்ளனர்.

அடித்துக் கொல்லப்பட்ட பரூக் கான் என்பவர் தவுபல் மாவட்டத்தை சேர்ந்தவர். அவருடன் சம்பவ இடத்தில் 2 பேர் இருந்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக இருவரும் தப்பிச் சென்று விட்டனர். இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றர். இதுதொடர்பாக 22-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு மாநில காவல்துறைக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விரைந்து விசாரணை மேற்கொள்வதற்கு மாநில முதல்வர் பிரேன் சிங் உத்தரவிட்டுள்ளார்.

.