This Article is From May 25, 2020

சொத்து, நகைக்காக பாம்பை பயன்படுத்தி மனைவியை கொன்ற கணவர்! சினிமா பாணியில் நடந்த சம்பவம்

உத்ராவை திருமணம் முடித்தபோது ஏராளமான பணமும், 100 தங்க காசுகளும் வரதட்சனையாக சூரஜூக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை கைப்பற்றி செல்வதுதான் சூரஜின் திட்டம். அதற்கு தடையாக நிற்கும் உத்ராவை கொல்ல தீர்மானித்த சூரஜ், தானும் வழக்கில் சிக்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

சொத்து, நகைக்காக பாம்பை பயன்படுத்தி மனைவியை கொன்ற கணவர்!  சினிமா பாணியில் நடந்த சம்பவம்

சூரஜ் மற்றும் அவருக்கு பாம்பு சப்ளை செய்த நண்பர் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • பாம்பை வைத்து மனைவியை கொன்ற சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது
  • கணவன் மற்றும் அவருக்கு பாம்பை அளித்த அவரது நண்பர் கைதாகியுள்ளனர்
  • சினிமா பாணியில் நடந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Kollam, Kerala:

சொத்து, நகைக்காக பாம்பை பயன்படுத்தி மனைவியை ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. 

முதல் முயற்சியில் தோல்வியடைந்த நபர், இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார். இதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தி அவர் கம்பி எண்ணுவதற்கு காரணமாக அமைந்து விட்டது.

கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் சூரஜ். இவர் அங்குள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். அவருக்கு உத்ரா என்ற மனைவியும், ஒரு வயதில் மகனும் உள்ளார். 

உத்ராவை திருமணம் முடித்தபோது ஏராளமான பணமும், 100 தங்க காசுகளும் வரதட்சனையாக சூரஜூக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனை கைப்பற்றி செல்வதுதான் சூரஜின் திட்டம். அதற்கு தடையாக நிற்கும் உத்ராவை கொல்ல தீர்மானித்த சூரஜ், தானும் வழக்கில் சிக்கி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். 

இதுதொடர்பாக தனது நண்பர் சுரேஷ் என்பவரை அணுகி, கடந்த பிப்ரவரி மாதம் பாம்பு ஒன்றை பெற்றார். பின்னர் பாம்பு வீடியோக்களை பார்த்து, அதன் மூலம் கொலை செய்வதை கற்றுக் கொண்ட சூரஜ், பாம்பை மனைவியின் படுக்கையில் விட்டுள்ளார். பாம்பு கடித்ததில் உத்ரா மயக்கமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அங்கு அவருக்கு ஒரு மாதம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன்பின்னர் அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் மே 6-ம்தேதி இன்னொரு பாம்பை வீசி, மனைவியை கடிக்க வைத்து அவரை சூரஜ் கொன்றுள்ளார். 

போலீஸ் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக சூரஜ் பதில் அளித்தார். தொடர்ந்து போலீசார் கொடுத்த ட்ரீட்மென்டில் சூரஜ் உண்மையை ஒப்புக் கொண்டார். 

சொத்துக்காக பாம்பை வைத்து மனைவியை கொலை செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

.