This Article is From Sep 09, 2020

கிசான் நிதி முறைகேடு - கண்டறிந்தது தமிழக அரசு தான்: முதல்வர் பழனிசாமி

முன்னதாக தமிழ்நாட்டில் வேளான் திட்டத்தில் இதுவரை ரூ. 110 கோடி வரை முறைகேடு நடந்து இருப்பதாகவும், இதுதொடர்பாக 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக வேளாண் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

கிசான் நிதி முறைகேடு - கண்டறிந்தது தமிழக அரசு தான்: முதல்வர் பழனிசாமி

கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழ்நாட்டில் வேளான் திட்டத்தில் இதுவரை ரூ. 110 கோடி வரை முறைகேடு நடந்து இருப்பதாகவும், இதுதொடர்பாக 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக வேளாண் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு ஏழை எளிய விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கி வருகின்றது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த திட்டத்தில் போலி கணக்குகளை உருவாக்கி இதுவரை ரூ.110 கோடி முதல் ரூ.120 கோடி வரை மோசடி நடந்திருக்கலாம் என்று தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் முறைகேடாக பணம் பெற்ற பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்களின் வங்கிக் கணக்கு சேலத்தில் முடக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் முறைகேடு செய்தவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து நிதி திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று விளக்கம் அளித்து இருக்கும் தமிழக வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ''கிசான் திட்ட முறைகேடு விவகாரத்தில் இதுவரை 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், தமிழகம் முழுவதும் ரூ. 110 கோடி முதல் ரூ. 120 கோடி வைர முறைகேடு நடந்துள்ளது என்றும், இதுவரை 32 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது என்றும், இதில் ஈடுபட்டவர்கள் யாராயினும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், கிசான் திட்டம் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசித்த பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, விவசாயிகள் தாமாக பதிவு செய்யும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியதால்தான் முறைகேடு ஏற்பட்டுள்ளது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நதிநீர் விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டுத்தர மாட்டோம் என்றும் தமிழகத்தில் கொலைகள் மறைக்கப்பட்டதாக ஸ்டாலின் உண்மைக்குப் புறம்பாக கூறிவருகிறார் என்றும் தெரிவித்தார்.

.