
சமீபத்திய வான் வழி தாக்குதல்களால் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.
ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி திங்களன்று வீடியோவில் தோன்றி சிரியாவில் அடைந்த தோல்வி, இலங்கை தாகுதல் குறித்து பேசியுள்ளார். 5 ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் வீடியோவில் தோன்றியுள்ளார்.
வெள்ளை நிற அறையில் அமர்ந்தபடி பேசும்படியாக வீடியோ வெளியாகியுள்ளது. அதன் ஆரம்பத்தில் பாக்கோஸில் அவரது படையினர் தோல்வியடைந்தது குறித்து பேசுகிறார். மேலும், போர் முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அடுத்ததாக ஈஸ்டர் அன்று இலங்கையில் தாக்குதல் நடத்தியவர்களை பாராட்டியுள்ளார்.
2014ல் மீண்டும் இஸ்லாமிய தேசத்தை உருவாக்குவோம் என்ற சபதத்துடன் ஜூலை 2014ல் ஒரு வீடியோ வெளியானது. அதன்பின் அவர் தோன்றும் வீடியோ இதுதான். அவரது உடல் நிலை வீடியோவில் ஆரோக்கியமாகவே உள்ளது என்று தெரிகிறது. சமீபத்திய வான் வழி தாக்குதல்களால் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று தெரிகிறது.
ஐஎஸ்ஐஎஸ்-ன் ஃபர்கான் சேனலில் இந்த வீடியோ வெளியானது. பக்தாதி, ஐஎஸ்ஐஎஸ் மீதான தாக்குதலில் தப்பித்துள்ளார் என்பது இந்த வீடியோ மூலம் உறுதியாகியுள்ளது. அவர் சிரியாவின் பாலைவனப்பகுதிகளில் ஒளிந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.
'எஸ்ஐடிஇ' உளவு அமைப்பின் இயக்குனர் ரிட்டா கட்ஸ் இதனை அபாயகரமான அறிகுறி என்று கூறியுள்ளார்.
"இந்த வீடியோ வெறும் அவர் உயிரோடு இருக்கிறார் என்பதற்கான ஆதாரம் மட்டுமல்ல. மீண்டும் குழுக்களை இணைப்பதற்கான அணுகுமுறை" என்று கூறியுள்ளார்.