This Article is From Sep 22, 2018

“திமிர் பிடித்த இந்தியா” - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கருத்தால் சர்ச்சை

இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பை இந்தியா ரத்து செய்தது. இதையடுத்து இம்ரான் கான் கடுமையான விமர்சனத்தை கூறியுள்ளார்.

“திமிர் பிடித்த இந்தியா” - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கருத்தால் சர்ச்சை

3 வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இம்ரான் கானின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டதாக இந்தியா கூறியது.

New Delhi:

இருதரப்பு பேச்சுவார்த்தை தொடர்பாக திமிர் பிடித்தது போன்று இந்தியா பதில் அளித்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவில் நடைபெறம் ஐ.நா. மாநாட்டின்போது இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பேசுவார்கள் என்று நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்கடுத்த நாளில் ஜம்மு காஷ்மீரில் 3 போலீசாரை கடத்தி தீவிரவாதிகள் கொன்றனர். இதேபோன்று, ஜம்மு காஷ்மீருடனான உறவை குறிப்பிடும் வகையில் பாகிஸ்தான் அரசு 20 தபால் தலைகளை வெளியிட்டுள்ளது. அதில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த புர்கான் வானியின் படமும் இடம்பெற்றுள்ளது. தீவிரவாதியான அவரை பாதுகாப்பு படையினர் கடந்த 2016-ல் சுட்டுக் கொன்றனர்.

இந்த இரு காரணங்களை சுட்டிக் காட்டி வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறுகையில், “இம்ரான் கானின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது. இந்த நிலைமையில் பேச்சுவார்த்தை நடத்துவது முற்றிலும் அர்த்தமற்றது. இம்ரான் கான் கோரிக்கை வைத்தபோது, பாகிஸ்தான் ஏதோ நல்ல விதமாகத்தான் நடந்து கொள்கிறது என நம்பினோம். ஆனால், மிக மோசமான உள்நோக்கத்துடன்தான் இம்ரான் கான் இந்தியாவுக்கு கோரிக்கை வைத்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி அளித்துள்ள பதிலில், சந்திப்பு ரத்தாகியிருப்பது துரதிருஷ்டவசமானது. உள்நாட்டு நெருக்கடிகள் காரணமாக இந்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்தியாவின் நடவடிக்கைக்கு இம்ரான் கான் காட்டமான பதிலை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவின் திமிர்த்தனமான மற்றும் எதிர்மறையான பதில் எனக்கு அதிருப்தியை அளிக்கிறது. எது எப்படியோ; என் வாழ்நாள் முழுவதும் தொலைநோக்குப் பார்வையற்ற, குறுமதியாளர்கள் உயர்ந்த பொறுப்புகளை வகிப்பதை பார்த்து வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

.