This Article is From Aug 12, 2018

ஆபாசப் படம் பார்க்க கட்டாயப்படுத்தி 6 மாதங்களாக வன்புணர்ச்சி: போபால் பெண் புகார்

புகாரை அடுத்து கடந்த புதன்கிழமை விடுதி இயக்குநர் கைது செய்யப்பட்டார்

ஆபாசப் படம் பார்க்க கட்டாயப்படுத்தி 6 மாதங்களாக வன்புணர்ச்சி: போபால் பெண் புகார்

ஹைலைட்ஸ்

  • போபால் விடுதியில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக மூன்று பெண்கள் புகார்
  • புதன் அன்று விடுதி இயக்குநர் அஷ்வினி குமார் கைது
  • அஷ்வினி ஆளும் பாஜக தலைவர்களுடன் தொடர்புடையவர் என்று காங்கிரஸ் புகார்
Bhopal:

பேச்சு, செவித்திறன் குறைபாடு உடைய இருபது வயது இளம்பெண் போபாலில் உள்ள தனியார் விடுதி ஒன்றின் இயக்குநர் மீது கடந்த வாரம் பாலியல் புகார் அளித்திருந்தார். இதற்கு இரு தினங்கள் கழித்து, மேலும் இரண்டு பெண்கள் இதேபோன்ற புகார்களை அளித்திருந்தனர். தற்போது நான்காவதாக மேலும் ஒரு பெண் இவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். அதில் "ஆறு மாதங்களாக என்னை அடைத்து வைத்து பல்வேறு சித்ரவதைகள் செய்தார். ஆபாசப் படங்களைப் பார்க்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தி, தொடர்ந்து வன்புணர்ந்தார். மறுத்தால் மோசமாகத் தாக்குவார்" என்று அதிர்ச்சி தரும் புகார்களை இந்தூர் காவல்துறையிடம் அடுக்கியுள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்றே கைது செய்யப்பட்ட விடுதி இயக்குநர் அஷ்வனி குமார் மீது வன்புணர்வு, மிரட்டல், சட்டவிரோதமாக அடைத்து வத்தல், தலித்துக்கு எதிரான வன்கொடுமை ஆகிய பிரிவுகள் மீது வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தற்போது புகார் அளித்துள்ள 23 வயது பெண் மத்தியப் பிரேதசத்தின் தார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவருடன் சேர்த்து மொத்தம் நான்கு பெண்களை அவத்புரியின் கிரிஸ்டல் ஐடியல் சிட்டியில் உள்ள ஒரு தனி வீட்டில், தனியார் விடுதி இயக்குநரான அஷ்வினி குமார் அடைத்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இப்புகார் குறித்து, போபால் காவல்துறையின் மூத்த அதிகாரி தர்மேந்திரா கூறுகையில், "நான் இந்தூர் காவல்துறையுடன் தொடர்பில் உள்ளேன். புகார் மீது வழக்குப் பதிவு செய்து விவரங்களை மேல் விசாரணைக்காக போபால் காவல்துறைக்கு அனுப்புமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளேன்" என்றார்.

மேலும் மாநிலம் முழுவதும் பெண்கள் விடுதிகளில் மாதாந்திர சோதனைகளை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே காங்கிரஸ் கட்சி, "அண்மையில் பீகாரில் குழந்தைகளை வன்புணர்ந்து சித்திரவதை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜேஷ் தாகூர் என்னும் நபரைப் போலவே அஷ்வினி குமாரும் பாஜகவுடன் தொடர்புடையவர்" என்று குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷோபா ஆஸ், "கைது செய்யப்பட்ட அஷ்வினி குமார் ஒரு ஆர்எஸ்எஸ் செயற்பாட்டாளர். முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் ஆசி பெற்றவர்" என்று கூறினார். காங்கிரஸ் வெளியிட்ட வீடியோவில், அஷ்வினி குமார் முதல்வர் சிவராஷ் சிங் சவுகானோடு நெருக்கமாக நின்றிருப்பதாகவும் அவரின் பாதத்தைத் தொட்டு ஆசி பெறுவதாகவும் காட்சிகள் உள்ளன.

இதனை மறுத்த பாஜ செய்தித்தொடர்பாளர் ராகுல் கோத்தாரி, 'விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கையில் காங்கிரஸ் தேவையின்றி ஒரு உணர்வுப்பூர்வமான விசயத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறி அரசியல் ஆதாயம் தேட முயல்கிறது' என்று தெரிவித்தார்.

ம.பி. காங்கிரஸ் தலைவர் கமல்நாத், இவ்வழக்கில் சிபிஐ விசாரணையை வலியுறுத்தி மாநில முதல்வர் சவுகானுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

.