Lok Sabha elections: பிரதமர் மோடி இன்று மகராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
New Delhi: 2019 மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு 18 மாநிலம், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளில் நேற்று விறுவிறுப்பாக நடந்தது. இத்துடன் 4 மாநில சட்டப்பேரவை தேர்தல்களும் நடந்தன. இதில், சராசரியாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஏழு கட்டங்களாக நடத்தப்படும் இந்த தேர்தலில், மீதமுள்ள கட்டங்களுக்கான தேர்தலுக்காக பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் இன்று பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
இதில், பிரதமர் மோடி இன்று மகராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் பிரசாரம் மேற்கொள்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தமிழகத்தில் பல்வேறு தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்.
முதல்கட்ட வாக்குப்பதிவில், அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் 80.9 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக பீகாரில் 50.3 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதில் பல்வேறு வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. ஆந்திர பிரதேசம் மற்றும் அருணாசல பிரதேசத்தில் கடும் மோதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திராவில், நடந்த இந்த மோதலில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஒரு உயிரிழந்துள்ளார்.
இதேபோல், பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நீண்ட நேரம் தாமதமாகியுள்ளது.
இதில் அதிருப்தியடைந்த மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்துவிட்டு, வாக்களிக்காமல் வீடு திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால், ஆந்திரவில், 150 தொகுதிகளில் மறுதேர்தல் நடந்த வேண்டும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.