This Article is From Jun 24, 2020

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம்: முதல்வர் எடப்பாடி

மாவட்டத்தில் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம்: முதல்வர் எடப்பாடி

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம்: முதல்வர் எடப்பாடி

ஹைலைட்ஸ்

  • மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம்: முதல்வர் எடப்பாடி
  • வாகனப் போக்குவரத்தில் மண்டல முறை தற்காலிகமாக ரத்து
  • மாவட்டத்தில் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத கடைசி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன், ஜூன்.30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இதனால், நோய் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த 19ஆம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இதன் காரணமாக அப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இதனிடையே, மதுரையிலும் தொற்று பரவல் அதிகமாக காணப்பட்டதால் அங்கும் சென்னையை போல், இன்று முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கும் குடும்ப அரசி அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1000 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று காலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் கலந்தாலோசனை மேற்கொண்டார். அதில், தற்போது வாகனப் போக்குவரத்துக்கு மண்டல முறை அமலில் உள்ளதால், மண்டலங்களின் பிற மாவட்டங்களிலிருந்து இ-பாஸ் இல்லாமல் வருபவர்களுக்கு, நோய் தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளதாகவும், மக்களின் பயணங்களை இதனால் தடுக்க இயலவில்லை என்று தெரிவித்துள்ளனர்.  

இதைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 25.6.2020 முதல் 30.6.2020 வரை வாகனப் போக்குவரத்தில் மண்டல முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதில் மாவட்டத்தில் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெறவேண்டும் என்றும் அரசு முடிவு செய்துள்ளது. 

மேற்குறிப்பிட்ட காலத்தில், பொதுப் பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்குள் மட்டும் செயல்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.