This Article is From Feb 27, 2020

டெல்லி வன்முறை: 27 பேர் பலி; தொடரும் பதற்றம் - 10 முக்கியத் தகவல்கள்!

Northeast Delhi Violence: வடகிழக்கு டெல்லியில் கும்பலாகக் கூடுவதற்குத் திங்கட்கிழமையிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தடை உத்தரவைப் பலரும் பொருட்படுத்தவில்லை.

Northeast Delhi violence- அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு வந்த நேரத்தில் இந்த கலவரம் நடந்திருப்பதால், இது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன

ஹைலைட்ஸ்

  • இந்தக் கலவரங்களால் 150க்கும் மேற்பட்டோருக்குக் காயம் எற்பட்டுள்ளது
  • இன்றும் பல இடங்களில் பதற்றமான சூழலே நிலவுகிறது
  • உயிரிழந்தவர்களில் ஒரு போலீஸும் அடங்குவார்
New Delhi:

டெல்லியின் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வன்முறைச் சம்பவத்திற்கு இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 180க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் நடந்த இந்த வன்முறையில் பல்வேறு கட்டடங்களுக்கும், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறைச் சம்பவம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் நடைபெற இருந்த பொதுத் தேர்வுகளை சிபிஎஸ்இ வாரியம் தள்ளிவைத்துள்ளது. இதனிடையே, நேற்றிரவு தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், டெல்லி துணை ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். அங்கு அவர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

1.குடியுரிமை சட்டத் திருத்தத்தினை குறித்து நடந்த வன்முறையில் காயமடைந்தவர்களுக்கு உரியப் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு உடனடியாக அளிக்கவேண்டிய சிகிச்சையை உறுதி செய்யுமாறு நள்ளிரவில் நடந்த விசாரணையில், டெல்லி உயர் நீதிமன்றம் போலீசாருக்கு அறிவுறுத்தியது. 

2.அரவிந்த் கெஜ்ரிவாலின் இல்லத்துக்கு வெளியே, நேற்று ஜேஎன்யூ மற்றும் ஜாமியா மிலியா மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி கலவரத்துக்குக் காரணமானவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். அதிகாலை 3:30 மணி அளவில் மாணவர்கள் மீது டெல்லி போலீஸ், தண்ணீர் பீய்ச்சி அடிக்கவே அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். 

3.டெல்லி வன்முறையைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் அவசர சந்திப்பை மேற்கொண்டார். 24 மணி நேரத்தில் அவர் நடத்திய 3வது சந்திப்பு இது. டெல்லியில் நிலவும் அசாதாரண சூழலைத் தொடர்ந்து, தனது கேரள பயணத்தையும் ரத்து செய்தார் அமித்ஷா.

4.முன்னதாக உள்துறை அமைச்சகம், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகத் தெரிவித்தது. இருப்பினும் பலி எண்ணிக்கைத் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருந்தது. மேலும் ராணுவத்தை பணியில் அமர்த்தத் தேவையில்லை என்றும், போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் போதும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. 

5.டெல்லியில் வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து அதற்குச் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் டெல்லி போலீஸின் தலைவரான அமுல்யா பட்நாயக், “உள்துறை அமைச்சகம் எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறது. எங்களிடம் போதுமான படைபலம் உள்ளது,” என்றார். 

6.செவ்வாய் மாலையன்று, போலீஸ் எடுத்த நடவடிக்கையால் ஜாஃப்பர்பாத் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். 

7.டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், செவ்வாயன்று ராஜ்கட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரார்த்தனை மேற்கொண்டார். அவர், மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் மசூதிகள் மற்றும் கோயில்கள் அமைதியை நிலைநாட்ட உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

8.இன்று கிழக்கு டெல்லியில் நடக்கவிருந்த சிபிஎஸ்இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. டெல்லி அரசும், அனைத்து அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளை மூட உத்தரவிட்டது. 

9.வடகிழக்கு டெல்லியில் கும்பலாகக் கூடுவதற்குத் திங்கட்கிழமையிலிருந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தடை உத்தரவைப் பலரும் பொருட்படுத்தவில்லை. இது குறித்து டெல்லி போலீஸ், ஊரடங்கு உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கூறியது. அதே நேரத்தில், மக்களை அமைதி காக்குமாறும் வலியுறுத்தியது. 

10.அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு வந்த நேரத்தில் இந்த கலவரம் நடந்திருப்பதால், இது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கலாம் என்று அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிபர் டிரம்பிடம் கேட்டபோது, “அது குறித்து நான் பிரதமர் நரேந்திர மோடியிடம் விவாதிக்கவில்லை. ஆனால், இந்தப் போராட்டங்களை அணுகுவது குறித்து இந்தியாதான் முடிவெடுக்க வேண்டும்,“ என்று கூறினார். 

.