This Article is From May 15, 2020

'மே 18 முதல் தமிழகத்தில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும்' - அரசு அறிவிப்பு

பொது முடக்கம் மே 17-ம் தேதியுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கட்டுப்பாடு தளர்வு தொடர்பான அறிவிப்புகள் நாள் தோறும் வந்து கொண்டிருக்கின்றன.

'மே 18 முதல் தமிழகத்தில் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும்' - அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Chennai:

மே 18-ம்தேதி முதல் தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படத் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

பொது முடக்கம் மே 17-ம் தேதியுடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கட்டுப்பாடு தளர்வு தொடர்பான அறிவிப்புகள் நாள் தோறும் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் அரசு அலுவகங்கள் செயல்பாடு தொடர்பாக தமிழக அரசு இன்று முக்கிய உத்தரவை பிறப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது-

கொரோனா பாதிப்பு காரணமாக மே 3-ம்தேதி முதல் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 33 சதவீதமாக குறைக்கப்பட்டது. மே 18 முதல் முழு சமூக விலகலை கடைபிடித்து 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும். 

ஊரடங்கால் இழந்த பணிநாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாட்கள் செயல்பாடு இருக்கும். ஊழியர்கள் 2 விதமாகப் பிரிக்கப்படுவர். ஒரு குழு திங்கள், செவ்வாய் பணியாற்றினால் அடுத்த குழு புதன் வியாழன் பணியாற்றும். முதல் குழு வெள்ளி, சனி பணியாற்றும். 

அனைத்து குரூப்-ஏ தகுதி அலுவலர்கள், அலுவலகத் தலைமைப் பொறுப்பில் உள்ள அலுவலர்கள் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கட்டாயம் அலுவலகம் வரவேண்டும்.

அனைத்து அலுவலர்கள் அல்லது அலுவலக ஊழியர்கள், அலுவலகப் பணியாளர்கள் எந்நேரமும் அலுவலகப் பணிக்குத் தயாராக இருக்க வேண்டும். மின்னணு சாதனங்கள், இ-மெயில், காணொலி அழைப்புக்கும் அவர்கள் பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இந்த நடைமுறை அனைத்து அரசு மாவட்ட அளவிலான அரசு அலுவலகங்கள் மற்றும் மக்களோடு நேரடித் தொடர்புள்ள கள அளவிலான ஆணையங்கள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், பயிற்சி மையங்கள், கூட்டுறவு அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு சார் அலுவலகங்களுக்குப் பொருந்தும்.

இவ்வாறு தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.