This Article is From Apr 14, 2020

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ தாண்டியது!

Coronavirus cases in India: கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்கள் வரிசையில், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் உள்ளன.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ தாண்டியது!

India COVID-19 Cases: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ தாண்டியது!

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,000ஐ தாண்டியது!
  • உயிரிழந்தோர் எண்ணிக்கை 339ஆக உயர்வு
  • கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 1211 பேர் புதிதாக பாதிப்பு
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 10,363 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 339ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 1211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 31 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும், 1036 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் மோடி 4வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது நாடு முழுவதும் மே.3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவித்தார். அதேபோல், இன்றிலிருந்து ஏப்ரல்.20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல்.20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

இதற்குமேல், கொரோனா ஹாட்ஸ்பாட்டுகள்' ஏற்படாதவாறு நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். கொரோனா அதிகமுள்ள ஹாட்ஸ்பாட்டுகளில் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு 7 வேண்டுகோள்களை பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ளார்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2334 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். 217 பேர் குணமடைந்துள்ளனர். அடுத்த இடத்தில் 1510 பேருக்கு தொற்று பாதிப்புடன் டெல்லி  2ம் இடத்தில் உள்ளது. 28 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் வரை இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகம் நேற்று முதல் 3-ம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 1173 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனிடையே, சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், இனி மக்கள் முகக் கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. 

மேலும் கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க பொது மக்கள் வெளியே செல்லும் பொழுது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தொற்று நோய் தடுப்பு மற்றும் பொதுச் சுகாதார சட்டங்களின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அணியத் தவறினால், அவர்களின் அவசரக்கால போக்குவரத்து அனுமதிச் சீட்டு ரத்து செய்யப்படுவதோடு, மூன்று மாதங்களுக்கு அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

.