This Article is From Aug 24, 2020

பாஜகவுடன் கூட்டா? ராகுல் குற்றச்சாட்டுக்கு கபில் சிபில் பதிலடி!

CWC Meeting: ராகுல் காந்தி நாங்கள் பாஜகவுடன் கூட்டு வைத்தாக குற்றம்சாட்டுகிறார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை பாதுகாத்து வெற்றி பெற வைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

பாஜகவுடன் கூட்டா? ராகுல் குற்றச்சாட்டுக்கு கபில் சிபில் பதிலடி!. (File)

New Delhi:

காங்கிரஸ் கட்சி தலைமை குறித்து கடிதம் எழுதியவர்கள் பாஜகவுடன் கூட்டு வைத்துள்ளதாக ராகுல் காந்தி கடும் காட்டமாக குற்றம்சாட்டியிருந்த நிலையில், ராகுலின் கருத்துக்கு கபில் சிபில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இன்று காலை நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும் படியும், தனக்கு மாற்றாக வேறு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளை தொடங்குங்கள் என சோனியா காந்தி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, பேசிய ராகுல் காந்தி தலைமை குறித்து கடிதம் எழுதியவர்களை கடும் காட்டமாக விமர்சித்தார்.

தொடர்ந்து, கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தலைமை குறித்து கடிதம் எழுதியவர்களை கடுமையாக விமர்சித்ததை தொடர்ந்து, குலாம் நபி ஆசாத் தான் ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். 

தொடர்ந்து, தலைமை குறித்து கடிதம் எழுதியவர்களின் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபில், ராகுலின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கபில் சிபில் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, ராகுல் காந்தி நாங்கள் பாஜகவுடன் கூட்டு வைத்தாக குற்றம்சாட்டுகிறார். ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை பாதுகாத்து வெற்றி பெற வைத்தோம், பாஜக அரசை வீழ்த்த மணிப்பூரில் கட்சியைக் பாதுகாத்துள்ளோம். கடந்த 30 ஆண்டுகளில் எந்தவொரு பிரச்சினையிலும் பாஜகவுக்கு ஆதரவாக ஒரு அறிக்கை கூட வெளியட்டதில்லை. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்கிறோமா! என்று அவர் பதில் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா அந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ளார். அதில், இதுபோல எந்தொரு கருத்தும் தெரிவிக்கவில்லை. தயவுசெய்து ஊடகங்களில் தவறான தகவல்களுக்கு செவி சாய்க்க வேண்டாம். நாம் ஒருவருக்கொருவர் எதிராக போராடுவதையும், காயப்படுத்துவதையும் தவிர்த்து, மோடி ஆட்சியை எதிர்த்து போராட நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து, கபில் சிபில் தனது முந்தைய ட்விட்டர் பதிவை நீக்கி விட்டார். தொடர்ந்து, ராகுல் காந்தி தன்னை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டதாகவும், அவர் என்னை பற்றி அப்படி எதுவும் கூறவில்லை என்று கூறினார். அதனால், எனது முந்தைய ட்விட்டை நான் திரும்ப பெறுகிறேன் என்று தெரிவித்துள்ளார். 

20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கட்சி தலைமையை விமர்சித்து கடிதம் அளித்ததில் கடும் கோபமடைந்த ராகுல் காந்தி, இன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் சரமாரி கேள்வி எழுப்பினார். மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் நெருக்கடி நிலையை சந்தித்து வரும் நிலையில், கட்சி தலைவர் சோனியா காந்தி உடல்நலம் சரியில்லாத நிலையில், இப்படி ஒரு நேரத்தில் எதற்காக இதுபோன்ற கடிதம் அளிக்கப்பட்டுள்ளது? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். 

.