This Article is From Nov 23, 2019

மகாராஷ்டிரா அரசியலில் எதிர்பாராத திருப்பம்; முதல்வரானார் தேவேந்திர பட்னாவிஸ்!

மகாராஷ்டிராவில் கடந்த 10 நாட்களாக குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் இருந்த நிலையில், பாஜகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்துள்ளன. 

தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார்.

Mumbai:

மகாராஷ்டிரா அரசியலில் எதிர்பாராத திருப்பமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். 

மகாராஷ்டிராவில் கடந்த 10 நாட்களாக குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் இருந்த நிலையில், பாஜகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்துள்ளன. 

இந்நிலையில், பதவியேற்ற முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 


மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 105 தொகுதிகளிலும், சிவசேனா 56 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களை கைப்பற்றியது. 

இதில், பெரும்பான்மை கொண்ட கட்சியான பாஜகவை முதலில் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். எனினும், அழைப்பை ஏற்க பாஜக மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து, முதல்வர் பதவியையும் தேவேந்திர ஃபட்நாவிஸ் ராஜினாமா செய்தார். 

பாஜகவும் - சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தாலும், அதிகாரப்பகிர்வு மோதல் காரணமாக ஆட்சி அமைக்க முடியவில்லை. மக்களவை தேர்தலுக்கு முன்பு பாஜக தலைவர் அமித் ஷா சிவசேனாவுடம் கொண்ட ஒப்பந்தத்தின் படி, 50:50 அதிகாரப்பகிர்வு, சுழற்சி முறையில் முதல்வர் பதவி உள்ளிட்ட அம்சங்களை சிவசேனா தொடர்ந்து வலியுறுத்தியது. 

எனினும், பாஜக இதனை ஏற்காமல் பிடிவாதமாக இருந்து வந்தது. மேலும், அதிக இடங்களை கைப்பற்றிய தங்கள் கட்சி எதற்காக சரிபாதியாக அதிகாரத்தை பகிர வேண்டும் என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி மறுப்பு தெரிவித்து வந்தது. 

இதைத்தொடர்ந்து, பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க திட்டமிட்டது. இதற்காக தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களுடன் சிவசேனா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இதையடுத்து, சிவசேனாவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான நிலைப்பாட்டில் காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும், சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரேவே முதல்வராக 5 வருடமும் இருப்பார் என்று நேற்றைய தினம் தகவல் வெளியானது. 

இந்நிலையில், இன்று காலை எதிர்பாராத திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. 

இதற்காக மகாராஷ்டிராவில் இன்று காலை 5.47 மணி அளவில், மாநிலத்தில் அமலில் இருந்த குடியரசுத்தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டது. தொடர்ந்து, காலை 8 மணி அளவில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். தேசியவாத காங்கிரஸை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

பதவியேற்றப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறும்போது, மகாராஷ்டிராவிற்கு நிலையான ஆட்சி தேவை, சிவசேனா மக்களின் ஆணையை பின்பற்றவில்லை. 

ஆட்சி அமைக்க ஆளுநரிடம் இருந்து எங்களுக்கு அழைப்பு வந்தது என்று கூறிய அவர், எங்களை ஆதரித்த தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு நன்றிறைய தெரிவித்துக்கொள்கிறோம் என்றார். 

.