This Article is From Jul 15, 2019

அரைவேக்காட்டுத் தனமாக பேசுகிறார் நடிகர் சூர்யா: அமைச்சர் கடம்பூர் ராஜூ 

புதிய கல்விக் கொள்கை குறித்து நன்கு தெரிந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம். ஆனால் எதுவும் தெரியாமல் பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும்?

அரைவேக்காட்டுத் தனமாக பேசுகிறார் நடிகர் சூர்யா: அமைச்சர் கடம்பூர் ராஜூ 

சூர்யா அரை வேக்காட்டுத்தனமாக பேசுகிறார்.

கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யாவுக்கு என்ன தெரியும்? அவர் அரைவேக்காட்டுத் தனமாக பேசுகிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கடுமையாக விமர்சித்துள்ளார். 

அகரம் அறக்கட்டளை சார்பில நடந்த விழாவில் நடிகர் சூர்யா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் மூன்று வயதிலேயே 3 மொழிகள் திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி இதனை சமாளிக்கப் போகிறார்கள். 

அதேபோல குறைவான ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்திருப்பது சரியல்ல. அந்த பள்ளிகளை தரம் உயர்த்தாமல் பள்ளிகளை மூடினால் கிராமங்களில் இருக்கும் மாணவர்கள் எங்கு செல்வார்கள். அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நுழைத்தேர்வு நடத்துவது ஏன்?

எல்லோரும் அமைதியாக இருந்தால் இது நிச்சயம் திணிக்கப்படும். எனவே புதிய கல்வி கொள்கை மீதான ஆலோசனைகளை மாற்றங்களை ஆசிரியர், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள் என்றார். 

சூர்யாவின் இந்த விமர்சனம் அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு பெரும்பாலான ஆளும் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றர். அந்த வகையில் சூர்யாவின் கருத்து குறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ,

புதிய கல்விக் கொள்கை குறித்து நன்கு தெரிந்து கொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம். ஆனால் எதுவும் தெரியாமல் பேசுபவர்களுக்கு எப்படி பதில் கூற முடியும்? புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா அரை வேக்காட்டுத்தனமாக பேசுகிறார் என கடுமையாக விமர்சித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், ஆங்கில வழி கல்வி கற்பதற்காக தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லும் நிலை இருப்பதால் அதைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு சார்பில் அங்கன்வாடி மையங்களில் இருந்து ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டுள்ளது. 

அரசுப் பள்ளிகளுக்கு எவ்வித ஆபத்து இல்லாமலும் அதன் எண்ணிக்கை குறையாமல் அரசு பார்த்து கொள்ளும். 10 சதவீதம் இடஒதுக்கீட்டு விவகாரத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு வராத வகையில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று அவர் கூறினார்.

இதேபோல், புதிய கல்விக்கொள்கை குறித்து சூர்யா பேசியதற்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்தார். அதில், கிராமப்புற ரசிகர்களுக்காக உங்கள் படத்தின் டிக்கெட் விலையை குறைப்பீர்களா? தங்கள் படத்தின் விளம்பரத்திற்காகவும், அரசியல் நுழைவுக்காகவும் அவசரமாக கருத்து கூறுகிறீர்களா? என்று அவர் விமர்சித்திருந்தார். 
 

.