This Article is From Mar 13, 2020

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு!

கர்நாடகாவின் கல்புர்க்கியை சேர்ந்தவர் 76 வயது முதியவர் கடந்த பிப்.29ம் தேதி சவுதி அரேபியா சென்று திரும்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு!

கொரோனாவுக்கு 76 வயது முதியவர் உயிரிழப்பு

ஹைலைட்ஸ்

  • கொரோனாவுக்கு 76 வயது முதியவர் உயிரிழப்பு
  • கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பாகும்
  • உயிரிழந்தவர் சவுதி அரேபியா சென்று திரும்பியுள்ளார்.
New Delhi:

கர்நாடகாவில் உயிரிழந்த 76 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வரும் நிலையில், இந்தியாவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதைக் கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமலு உறுதிப்படுத்தியுள்ளார். 

உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருடன் தொடர்பிலிருந்த மற்றவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தப்படுவதோடு பிற தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார். 

கர்நாடகாவின் கல்புர்க்கியை சேர்ந்தவர் 76 வயது முதியவர் கடந்த பிப்.29ம் தேதி சவுதி அரேபியா சென்று திரும்பியுள்ளார். அவருக்கு ஐதராபாத் விமான நிலையத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், அப்போது அவரிடம் நோய் தொற்றுக்கான எந்த அறிகுறிகளும் தென்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

தொடர்ந்து, மார்ச்.5ம் தேதி ஆஸ்துமா மற்றும் இரத்த அழுத்தம் காரணமாகத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, அவருக்கு கொரோனா வைரஸ் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இதையடுத்து, 3 நாட்கள் கழித்து அவர் ஐதராபாத் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும், அன்றைய தினமே அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது வீடு திரும்பிய அவர் இரவு 10.30 மணி அளவில் உயிரிழந்துள்ளார். 

கொரோனா தொற்று உள்ள ஒருவரை தங்களது கட்டுப்பாட்டில் இருந்து மருத்துவனை எப்படி வீடு செல்ல அனுமதித்தது என்ற விவரங்கள் சரிவரத் தெரியவில்லை. 

இதைத்தொடர்ந்து, கர்நாடகாவில் இன்று ஐந்தாவதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர் கரீஸ் நாட்டிலிருந்து திரும்பிய நிலையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவர் பெங்களூர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். 

மேலும், அந்த இளைஞருடன் தொடர்பிலிருந்தவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை. எனினும், அவர்கள் வீட்டிலே தனிமைப்படுத்தி இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என அமைச்சர் ஸ்ரீனிவாசலு தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் இதுவரை 70 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 17 வெளிநாட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 11 லட்சத்திற்கு அதிகமானோர் விமான நிலையத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் தொற்று, பரவாமல் தடுக்கும் விதமாக இந்தியாவிற்கு வருவதற்காக வழங்கப்பட்ட அனைத்து விசாக்களையும் ஏப்.15ம் தேதி வரை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இதன் தொடர்ச்சியாக இன்று மாலை டெல்லியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூடப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில் ஆரம்ப பள்ளிகளை மூடப்பட்ட நிலையில், தேர்வுகள் காரணமாக மேல்நிலைப் பள்ளிகள் மட்டும் இயங்கி வந்தன. 

இதேபோல், கேரள மாநிலமும், உச்சக்கட்ட பாதுகாப்புடன் இருந்து வருகிறது. அங்கும் இந்த மாத இறுதி வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் திரையரங்குள் மூடப்பட்டுள்ளன. 

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொற்றுநோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. அதாவது, உலகளவில் பரவி ஏராளமான மக்களைப் பாதித்து வரும் நோய் என்று குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பு தனது அடுத்தடுத்து ட்வீட்களில், ஆபத்தான வகையில் பரவும் இந்த கொரோனா வைரஸின் தீவிரத்தன்மையால் ஆழ்ந்த கவலை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

.