This Article is From Apr 11, 2020

இந்தியாவில் இன்று மட்டும் 896 பேருக்கு கொரோனா பாதிப்பு! 37 பேர் பலியானதால் அதிர்ச்சி

ஒரே நாள் கணக்கெடுப்பின்படி இன்றுதான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்த அளவுக்கு கொரோனா கட்டுக்குள் வராததால் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

ஊரடங்கு தொடர்பாக நாளை பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

New Delhi:

இந்தியாவில் இன்று ஒரே நாளில் மட்டும் 896 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 37 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒரேநாள் கணக்கெடுப்பின்படி கடந்த 24 மணி நேரத்தில்தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்த அளவுக்கு கொரோனா கட்டுக்குள் வராததால் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 

மொத்தம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,761 ஆக உயர்ந்திருக்கிறது. இவர்களில் 206 பேர் உயிரிழந்துள்ளனர். 516 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியிருக்கிறார்கள்.

கொரோனாவை கட்டுப்படுத்த பஞ்சாப் மற்றும் ஒடிசா மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 30-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் 132 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவில் 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடி நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதன் முடிவில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே, இந்தியாவில் சமூக பரவல் நிலைக்கு கொரோனா பாதிப்பு இன்னும் செல்லவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம், 'இன்று 77 பேருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்ற அடிப்படையில் (Primary Contacts) 5 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்புடைய 72 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்தவர்களோடு, அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் பரிசோதித்துக் கொண்டிருக்கிறோம். ஓரிரு நாட்களில் இந்த பரிசோதனை முடிந்து விடும்.

அதற்கடுத்தபடியாக அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் சோதிக்கவுள்ளோம். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது' என்று தெரிவித்தார். 

.