This Article is From May 08, 2020

தண்டவாளத்தில் படுத்திருந்த 15 புலம் பெயர் தொழிலாளர்கள் மீது ரயில் ஏறியது!

மும்பையிலிருந்து 360 கி.மீ தொலைவில் உள்ள அவுரங்காபாத் பகுதிக்கு அருகில் உள்ள கர்மத் என்கிற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் படுத்து தூங்கினர்

தண்டவாளத்தில் படுத்திருந்த 15 புலம் பெயர் தொழிலாளர்கள் மீது ரயில் ஏறியது!

ரயில்வே பாதுகாப்புப்படை மற்றும் காவல் துறையினர் விபத்து நடந்த இடத்தினை அடைந்துள்ளனர்

Mumbai:

மும்பையிலிருந்து 360 கி.மீ தொலைவில் உள்ள அவுரங்காபாத் பகுதிக்கு அருகில் உள்ள கர்மத் என்கிற இடத்தில் ரயில் தண்டவாளத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் படுத்து தூங்கினர் என்றும், அச்சமயத்தில் அந்த வழியாக வந்த சரக்கு ரயில் அவர்கள் மீது ஏறியது என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அதிகாலை 5:15 மணியளவில் நடந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தண்டவாளங்களில் உறங்கிக்கொண்டிருந்த 20 பேர் கொண்ட குழுவின் மீது ரயில் மோதியதில் 15 பேர் பலியானதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த  விபத்திலிருந்து தப்பியோருக்கு காவல்துறையினர் ஆலோசனை வழங்கி வருவதாக மூத்த காவல்துறை அதிகாரி மோக்ஷாதா பாட்டீல் தெரிவித்துள்ளார். “உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைச் சேகரிப்பதற்கு முன்பு, இந்த  சம்வபத்திலிருந்து தப்பியவர்களுக்கு நாங்கள் ஆலோசனை வழங்கி வருகிறோம்“ என பாட்டீல்  கூறியுள்ளார்.

சம்பவம் ஏற்பட்ட தண்டவாள பகுதியில் தொழிலாளர்களின் செப்புகள், உணவுப் பொருட்கள் பரவலாக சிதறிக்கிடக்கின்றது. விபத்திற்குள்ளான குழுவில் குழந்தைகள் யாரும் இல்லையெனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், “இன்று அதிகாலை தண்டவாளத்தில் மனித நடமாட்டங்களைப் பார்த்த பிறகு ரயிலினை இயக்கிய லோகோ பைலட், ரயிலை நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், பர்பானி மற்றும் கர்மத் இரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அவுரங்காபாத் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என ரயில்வே அமைச்சகம் ட்விட் செய்துள்ளது.

“இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மன வேதனையை ஏற்படுத்துவதாகவும், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுடன் பேசியுள்ளதாகவும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்” என்றும் பிரதமர் சமீபத்தில் ட்விட் செய்துள்ளார்.

மகாராஷ்டிராவின் முன்னாள் சபாநாயகரும், புலாம்பிரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஹரிபாவ் பாக்தே சம்பவம் நடத்த இடத்தினை நேரில் பார்வையிட்டார்.

விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு நிவாரணம் கோரி மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், பியூஷ் கோயலுடன் பேசியுள்ளார். மேலும், உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணத்தை சவுகான் அறிவித்துள்ளார்.

காயமடைந்த தொழிலாளர்களுக்கான சிகிச்சை குறித்து சவுகான், மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்ரேவுடன் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாக மத்தியப் பிரதேச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில் சேவையை தொடங்கியிருந்தாலும் பல தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலங்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர்.

.