உலக வர்த்தக மையத்தில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
New York: இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள அவர், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து அவர் ஐ.நா. சபையிலும் பேசினார்.
இந்த நிலையில், புளூம்பெர்க் நகரில் உலக வர்த்தக மையத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது-
உலக முதலீட்டாளர்களின் ஆசைகளும் இந்தியர்களின் கனவுகளும் ஒன்றிணையும். முதலீட்டாளர்களின் தொழில் நுட்பமும் இந்தியாவின் திறமையும் உலகை மாற்றி அமைக்கும். முதலீட்டாளர்களின் நிதியும், இந்தியர்களின் திறமையும் உலக பொருளாதார வளர்ச்சியை இன்னும் வேகப்படுத்தும். இந்தியாவில் உலக முதலீட்டாளர்கள் அதிகளவு முதலீடு செய்ய வேண்டும். இதில் சிக்கல்கள் ஏதும் இருந்தால், அதனை பாலமாக இருந்து நான் தீர்த்து வைப்பேன்.
எஃப்.டி.ஐ. எனப்படும் நேரடி அன்னிய முதலீட்டின் மூலமாக பொருளாதார உயரும் என மத்திய அரசு கருதுகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்தியில் பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அன்னிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி ரத்தினை மத்திய அரசு சமீபத்தில் மேற்கொண்டது. இதன் மூலம் புதிய முதலீடுகளை இந்தியா ஈர்க்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.