This Article is From May 28, 2019

மோடிக்கு கிடைத்த வெற்றியல்ல, வாக்கு இயந்திரங்களுக்கு கிடைத்த வெற்றி: டிடிவி தினகரன்

தேர்தலில் வென்றது மோடிக்கு கிடைத்த வெற்றியல்ல என்றும் வாக்கு இயந்திரங்களுக்கு கிடைத்த வெற்றி என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

மோடிக்கு கிடைத்த வெற்றியல்ல, வாக்கு இயந்திரங்களுக்கு கிடைத்த வெற்றி: டிடிவி தினகரன்

மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு மாற்று கட்சியாக அமமுக இருக்கும் என எதிர்பார்த்த நிலையில், தேர்தல் முடிவுகள் அமமுகவுக்கு பேரிடியாக விழுந்துள்ளது. 

தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை என தெரியவந்துள்ளது. முகவர்களின் வாக்குகள் கூடவா எங்களுக்கு விழவில்லை என டிடிவி தேர்தல் ஆணையத்துக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், தேர்தல் முடிவுக்கு பின் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை இன்று டிடிவி தினகரன் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் கூறியதாவது, 

30 தொகுதியில் 588 பூத்களில் அமமுகவுக்கு பூஜ்யம் வாக்குகளே பதிவாகியுள்ளன. எங்களது ஒன்றிய செயலாளர் பூத்திலே பூஜ்யம் வாக்குகள் பதிவாகியுள்ளன. கண்டிப்பாக இதில் தவறுகள் நடந்துள்ளன. 

ஊட்டியில் எங்களது வேட்பாளர் ராமசாமி வாக்கு எண்ணிக்கை நடந்த பூத்திலே இதனை தெரிவித்துள்ளார். பூத் ஏஜெண்ட் எங்களது பூத்திலே பூஜ்யம் வாக்குகள் தான் பதிவாகியுள்ளது என தெரிவித்ததை கலெக்டரிடம் கூறியபோதும், உங்கள் ஏஜெண்ட் உங்களுக்கு தான் வாக்களித்தார் என்பது எப்படி தெரியும் என அவர் கோவமாக கேட்டுள்ளார். ஆதாரம் இல்லாததால், அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். 

தேர்தலுக்கு வாக்குச் சீட்டு முறையே சிறந்தது. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் போது, எங்களுடைய சிலீப்பர் செல்கள் வெளியே வருவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.


 

.