சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது.
இடைத்தேர்தலில் அமைக்கப்பட்ட அதிமுக கூட்டணியே உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-
காங்கிரஸ் வசம் இருந்த நாங்குநேரி சட்டமன்ற தொகுதி, திமுக வசம் இருந்த விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி என இரு தொகுதிகளிலும் கூட்டணி கட்சியினரோடு சேர்ந்த அதிமுக மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம்.
அதேபோன்று உள்ளாட்சி தேர்தலிலும் இடைத்தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணியுடன் அதிமுக தேர்தலை எதிர்கொள்ளும். அதே இடைத் தேர்தல் வெற்றியும் தொடரும்.
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா உடன் இருந்தார்.
கூட்டணி கட்சிகளுக்குள் எந்தவொரு பிணக்கமும் கிடையாது. எந்தவொரு சுணக்கமும் கிடையாது. சுமுகமாக பேச்சுவார்த்தை நடக்கிறது. எல்லோரும் ஒருமித்த கருத்தோடு, மகிழ்ச்சியோடு ஏற்கும் வகையில்தான் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த சனிக்கிழமை மாநில தேர்தல் ஆணையம் புதிய தேர்தல் அட்டவணை வெளியிட்டது. டிசம்பர் 27, 30-ந்தேதிகளில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்றும் மனுதாக்கல் 9-ந்தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.