This Article is From Jun 27, 2018

ஷுஜாத் புகாரி கொலை: குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல்!

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் வெளி வரும் 'ரைசிங் காஷ்மீர்' செய்தித்தாளின் ஆசிரியர் ஷுஜாத் புகாரி சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஹைலைட்ஸ்

  • ஒரு கொலையாளி லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படுகிறது
  • ஜூன் 14-ம் தேதி புகாரி கொலை செய்யப்பட்டார்
  • 17 குண்டுகள் அவர் உடலிலிருந்து எடுக்கப்பட்டது
Srinagar:

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் வெளி வரும் 'ரைசிங் காஷ்மீர்' செய்தித்தாளின் ஆசிரியர் ஷுஜாத் புகாரி சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில், அவரை கொலை செய்த மர்ம நபர்களை போலீஸ் கண்டறிந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வந்துள்ளது.

சுஜாத் புகாரி, சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீநகரில் இருக்கும் தனது செய்தித்தாள் அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் செல்ல மாலை 7:30 அளவில் வெளியே வந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து புகாரி மற்றும் அவரது பாதுகாப்புக்காக இருந்த காவலர்களையும் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் புகாரி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தியாவின் முக்கியமான பத்திரிகையின் ஆசிரியரே இப்படி சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. கடந்த 2000 ஆம் ஆண்டு அவர் மீது நடந்த தாக்குதலை அடுத்து, அவருடன் பாதுகாப்புக்கு காவலர்கள் இருக்கும்படி செய்தது அரசு. இருந்தும் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது பலரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. 

இந்நிலையில், புகாரியை கொலை செய்த மூன்று மர்ம நபர்களில் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவரவாதி என்றும், அவர் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளதாக தகவல். இவரைத் தவிர கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற இருவர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் கூறப்படுகிறது. 

புகாரியை கொலை செய்த பின்னர், கோஷமிட்டபடி அவர்கள் சென்றதாக அருகில் இருந்தவர்கள் கூறுகின்றனர். மேலும், புகாரிக்கு எதிராக ஆன்லைனில் பரப்புரை செய்து வந்த ஸ்ரீநகரைச் சேர்ந்த ஒருவர் மீதும் போலீஸ் சந்தேகப்பட்டு, விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக தகவல். இது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

.