This Article is From Aug 29, 2020

“கொரோனா காலத்தில் கல்விக் கட்டணமா..?”- அண்ணா பல்கலைக்கழகத்தை சாடும் சீமான்

"இப்பேரிடர் காலத்தில் கைவிடப்பட்ட தேர்வுகளுக்கும் தேர்வுக் கட்டணத்தைக் கட்டாயப்படுத்தி வசூலித்தது மாணவர்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது"

“கொரோனா காலத்தில் கல்விக் கட்டணமா..?”- அண்ணா பல்கலைக்கழகத்தை சாடும் சீமான்

"மாணவர்கள் பல்கலைகழக நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பல்கலைகழகத்தரப்பில் எவ்வித முறையான பதிலும் அளிக்கப்படவில்லை என்று தெரியவருகிறது."

அண்ணா பல்கலைக்கழகம், மாணவர்கள் கல்லூரிக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டுதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பை நாம் தமிழர் கட்சியின் சீமான், கடுமையாக சாடியுள்ளார். 

அவர், ‘அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் நடப்புக்கல்வியாண்டுக்கான முதல் பருவக் கட்டணத்தை வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டுமெனவும், செலுத்தத் தவறிய மாணவர்கள் 200 முதல் 500 வரை தண்டம் செலுத்த வேண்டுமெனவும் வெளியிடப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களின் பெயர்கள் செப்டம்பர் 6 முதல் பதிவேட்டிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என‌ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. கல்வி நிலையம் போலல்லாது, கடனை வசூல் செய்யும் நிறுவனம் போல் மிரட்டும் தொனியில் அரசு நடத்தும் பல்கலைக்கழகமே செயல்படுவதென்பது கல்வி வியாபாரமயமாக்கப்பட்டுள்ளதையே வெளிக்காட்டுகிறது.

பேரிடர் மேலாண்மை சட்டம் – 2005ன் படி 2020-21 ஆம் ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களையோ, பெற்றோர்களையோ கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், 2019-20 ஆம் ஆண்டிற்கான கட்டணத்தில் ஏதேனும் செலுத்தப்பட வேண்டிய தொகை இருந்தால் அதைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், ஏதேனும் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டாலும் அதற்குத் தண்டம் வசூலிக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தி கடந்த 21.04.2020 அன்று தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை சார்பில் ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவை அப்பட்டமாக மீறியுள்ள அண்ணா பல்கலைக்கழகம், உடனடியாகக் கல்விக்கட்டணத்தைச் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதென்பது சட்டவிரோத நடவடிக்கையாகும். இது குறித்து மாணவர்கள் பல்கலைகழக நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் பல்கலைகழகத்தரப்பில் எவ்வித முறையான பதிலும் அளிக்கப்படவில்லை என்று தெரியவருகிறது.

ஏற்கனவே, இப்பேரிடர் காலத்தில் கைவிடப்பட்ட தேர்வுகளுக்கும் தேர்வுக் கட்டணத்தைக் கட்டாயப்படுத்தி வசூலித்தது மாணவர்களிடத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பினால் குடும்ப வறுமையைப் போக்க நடுத்தர மற்றும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர் வேலைக்குச் செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். இச்சூழ்நிலையில் அவர்களைக் கல்விக்கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்துவதென்பது கட்டாய இடைநிற்றலுக்கு வழிவகுத்து அவர்களை உயர்கல்வியை விட்டே அப்புறப்படுத்தும் சமூக அநீதியாகும்.
ஆகவே, தமிழக அரசு, கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெறச் செய்ய வேண்டும் எனவும், இரண்டு ஆண்டிற்குக் கல்விக்கட்டணம் செலுத்துவதிலிருந்து பள்ளி மற்றும் உயர் கல்வி மாணவர்களுக்கு முற்றிலுமாக விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்' என்று அறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார். 

.