This Article is From Feb 25, 2020

டெல்லி வன்முறையால் பள்ளிகளுக்கு விடுமுறை நீடிப்பு!! துணை முதல்வர் தகவல்!

சிறுவர் சிறுமியரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால், வடகிழக்கு டெல்லியில் உள்ள மையத்தில் சி.பி.எஸ்.இ. பள்ளித்தேர்வுகளை ஒத்தி வைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி வன்முறையால் பள்ளிகளுக்கு விடுமுறை நீடிப்பு!! துணை முதல்வர் தகவல்!

தேர்வை ஒத்தி வைக்குமாறு சி.பி.எஸ்.இ. கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக மணிஷ் சிசோடியா கூறியுள்ளார்.

New Delhi:

டெல்லியில் ஏற்பட்டுள்ள வன்முறையால் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் ஒத்தி வைத்துள்ளது. முன்னதாக இந்த தேர்வை ஒத்தி வைக்குமாறு டெல்லி அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

டெல்லியை தவிர்த்து மற்ற இடங்களில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பதிவில், டெல்லியில் நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளையும் சி.பி.எஸ்.இ. ஒத்தி வைத்துள்ளது. வன்முறையால் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மாநில அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று சி.பி.எஸ்.இ. இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று கூறியுள்ளார். 

தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ள நிலையில் புதிய தேர்வு தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த வந்த போராட்டத்தில் நேற்றைய தினம் திடீரென பெரும் மோதல் ஏற்பட்டது. சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலை தொடர்ந்து, இருபிரிவினரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி, கற்களை வீசி தாக்கிக்கொண்டுள்ளனர். அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஒரு சில கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால், அந்த பகுதியே பெரும் போர்க்களமாக மாறியது. 

இதையடுத்து அங்கு போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி கலவரம் ஏற்படுத்தியவர்களைத் துரத்தி அடித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்தில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் தரப்பில், நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடந்த இந்த வன்முறைச் சம்பவத்தில் படுகாயமடைந்த தலைமைக் காவலர் ரத்தன் லால் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதேபோல், துணை ஆணையர் ஒருவரும் இதில் காயமடைந்துள்ளார். இதுதொடர்பாக வெளியான வீடியோக்களில், அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்படுகிறது. ஒரு சில கட்டிடங்களிலும் தீ வைக்கப்படுகிறது. 

மற்றொரு வீடியோவில், சிவப்பு நிற சட்டை அணிந்த ஒருவர் கையில் துப்பாக்கியுடன் காவலரை மிரட்டி விட்டு துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுகிறார். இதில் ஒரு சில வீடியோக்களில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் ஜெய்ஸ்ரீராம் கோஷம் எழுப்புகின்றனர். சில வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. கோகுல்புரி பகுதியில், மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள மார்க்கெட்டிற்கும் தீ வைக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். வன்முறை காரணமாக ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா பகுதிகள் போர்க்களமாக மாறின.

இந்த சம்பவத்தில் தற்போது வரையில் மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் ஏற்பட்ட சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

.