This Article is From Jun 10, 2020

நொறுக்குத்தீனி அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு தடை: தமிழக அரசு

தமிழகத்தில் பிளாஸ்டிக் பேக், வாட்டர் பாக்கெட், பிளாஸ்டிக் டீ கப் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தயார் செய்யவும், பயன்படுத்தவும் தமிழக அரசு தடை விதித்தது

நொறுக்குத்தீனி அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு தடை: தமிழக அரசு

நொறுக்குத்தீனி அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளுக்கு தடை: தமிழக அரசு

நொறுக்குத்தீனி அடைத்து விற்கப்படும் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2018ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணை பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு 2019ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. 

அதன்படி, தமிழகத்தில் பிளாஸ்டிக் பேக், வாட்டர் பாக்கெட், பிளாஸ்டிக் டீ கப் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தயார் செய்யவும், பயன்படுத்தவும் தமிழக அரசு தடை விதித்தது. இந்த அரசாணையை எதிர்த்து பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை அரசாணை செல்லும் எனவும், விலக்களிக்கப்பட்ட ப்ளாஸ்டிக் பயன்பாட்டையும் தடை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தது. 

இதைத்தொடர்ந்து, உணவு பண்டங்கள் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய, பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், பிளாஸ்டிக் மாசு இல்லா தமிழ்நாடு என்ற இலக்கை முழுமையாக எட்ட முடியவில்லை என்றும், அவற்றுக்கும் தடை விதிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் வாரியத் தலைவர் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். 

அதன் அடிப்படையில் பிளாஸ்டிக் தடை குறித்து தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக நொறுக்குத்தீனி அடைத்து விற்பனை செய்யப்படும் சீலிடப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

.