This Article is From Jan 20, 2020

'மக்களால் கைவிடப்பட்ட கட்சிகள் பொய்களை பரப்பிக் கொண்டிருக்கின்றன' - மோடி கடும் தாக்கு!!

'தேர்தல் அரசியலில் யாரெல்லாம் மக்களால் கைவிடப்பட்டார்களோ, யாரையெல்லாம் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்களோ அவர்களுக்கெல்லாம் சில ஆயுதங்கள் இருக்கின்றன. அவற்றில் பொய்களை பரப்புவது என்பது ஒரு ஆயுதம்' என மோடி பேசினார். 

'மக்களால் கைவிடப்பட்ட கட்சிகள் பொய்களை பரப்பிக் கொண்டிருக்கின்றன' - மோடி கடும் தாக்கு!!

பாஜக தலைவராக ஜே.பி. நட்டா பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

New Delhi:

மக்களால் கைவிடப்பட்ட கட்சிகளை பொய்களை பரப்பிக் கொண்டிருக்கின்றன என்று எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

பாஜகவின் அகில இந்திய தலைவராக ஜே.பி. நட்டா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதன்பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாஜகவுக்கு பிரச்னைகள் எழுந்துள்ளதாக சில கட்சிகள் விமர்சிக்கின்றன. ஆனால் அவைகள்தான், பாஜகவுக்கு மக்கள் மத்தியில் நற்பெயரை ஏற்படுத்தி தருகின்றனர். மக்களால் கைவிடப்பட்ட கட்சிகள் மக்கள் மத்தியில் பொய்களை பரப்பிக் கொண்டிருக்கின்றன என்று கூறினார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.ஆர்.சி., என்.பி.ஆர்., குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டங்களை எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளையும், போராட்டங்களையும் மறைமுகமாக குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், 'எங்களுக்கு எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்கிற எந்தவித அவசியமும் கிடையாது. நாங்கள் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்திருக்கிறோம். இந்த சிறிய குழுக்கள் எங்களை எதிர்க்கும்போது, அவர்களுக்கு நாங்கள் ஏன் அடி பணிய வேண்டும்' என்று கேள்வி எழுப்பினார். 

'தேர்தல் அரசியலில் யாரெல்லாம் மக்களால் கைவிடப்பட்டார்களோ, யாரையெல்லாம் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்களோ அவர்களுக்கெல்லாம் சில ஆயுதங்கள் இருக்கின்றன. அவற்றில் பொய்களை பரப்புவது என்பது ஒரு ஆயுதம்' என மோடி பேசினார். 

கடந்த ஒர மாதகாலமாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை குடியுரிமை சட்ட திருத்த விவகாரம் தொடர்பாக பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. 

அதே நேரத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் நிறைவேறியதில் இருந்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்திருக்கின்றன. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினர் இந்தியாவுக்கு மத அச்சுறுத்தல் காரணமாக வந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த மசோதா வழி செய்கிறது. இது முஸ்லிம்களை பாதிக்கும் என்ற கருத்து நிலவுகிறது. 

தேசிய குடிமக்கள் பதிவேடு எனப்படும் என்.ஆர்.சி., குடியுரிமை சட்ட திருத்தம் உள்ளிட்டவை இந்தியாவில் சட்டவிரோதமாக இருப்போரை வெளியேற்ற உதவும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் முஸ்லிம்களை குறி வைத்து இந்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்வதாக பல்வேறு தரப்பினர் கருத்துக் கூறியுள்ளனர். 

காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழுவான காரியக் கமிட்டியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, 'குடியுரிமை சட்ட திருத்தம் என்பது பாகுபாடு காட்டக்கூடியது. பிரிவினையை ஏற்படுத்தக்கூடியது. இந்த சட்டத்தின்நோக்கத்தை ஒவ்வொரு தேசப்பற்றாளரும், மதசார்பற்ற இந்தியர்களும் புரிந்து வைத்துள்ளனர். மதத்தை காரணம் காட்டி இந்தியர்களை இந்த சட்டம் பிரிக்கும்' என்று கூறியிருந்தார். 

.