This Article is From Nov 29, 2019

கோட்சே குறித்த சர்ச்சை கருத்து: நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் பிரக்யா!

என் மீது எந்த குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. நான் தவறாகக் குறிப்பிடப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளேன். என்னை ஒரு பயங்கரவாதி என்று அழைப்பது அவமானகரமானது என பிரக்யா கூறியுள்ளார்.

நாடாளுமன்ற அவையில் பிரக்யா தாகூர் மன்னிப்பு கோரினார்.

New Delhi:

மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசப்பக்தர் என்று கூறிய கருத்திற்காக நாடாளுமன்ற அவையில் பிரக்யா தாகூர் மன்னிப்பு கோரினார். எனினும், எந்த ஆதாரமும் இல்லாமல் தன்னை பயங்கரவாதி என்று எப்படி அழைக்கலாம் என்று ராகுல் காந்தியை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளர். 

முன்னதாக, எஸ்பிஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு படை திருத்த மசோதா தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் காரசாரமாக நடைபெற்றது. இதில் திமுக எம்.பி. ஆ.ராசா, இந்த விவகாரத்தை காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேயுடன் இணைத்து பேசினார். 

அப்போது குறுக்கீடு செய்த பாஜக எம்.பி. பிரக்யா தாகூர், 'தேசபக்தரை (கோட்சேவை) நீங்கள் உதாராணமாக குறிப்பிட்டு பேசக் கூடாது' என்று பேசினார். பிரக்யா தாகூரின் இந்த கருத்திற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தனது கருத்தை பிரக்யா திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறி வந்தனர்

இதனிடையே, கோட்சேவை தேசப்பக்தர் என்று பேசிய பிரக்யாவுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், சாத்வி பிரக்யாவின் கருத்தில் பாஜகவுக்கு உடன்பாடில்லை என்றும் இது போன்ற கருத்துகளை ஒரு போதும் ஆதரிக்க முடியாது என்றும் பாஜக தெரிவித்தது. தொடர்ந்து, பாஜக நாடாளுமன்ற குழு கூட்டத்திலும் சாத்வி பிரக்யா அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் பாஜக தலைமை அறிவித்தது. 

இதற்கிடையே, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பதவில், "பயங்கரவாதி பிரக்யா, பயங்கரவாதி கோட்சேவை ஒரு தேசபக்தர் என்று அழைக்கிறார். அது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு சோகமான நாள்" என்று தெரிவித்திருந்தார். 

மேலும் இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, பிரக்யா கூறியுள்ள கருத்துக்கள் "ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் இதயத்தை" பிரதிபலிக்கிறது. அதனை மறைக்க முடியாது. அதனால், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி "நேரத்தை வீணாக்க" விரும்பவில்லை என்று கூறியிருந்தார். 

இந்நிலையில், கோட்சேவை தேசப்பக்தர் என்று கூறிய கருத்திற்காக நாடாளுமன்ற அவையில் இன்று பிரக்யா தாகூர் மன்னிப்பு கோரினார். எனினும், எந்த ஆதாரமும் இல்லாமல் தன்னை பயங்கரவாதி என்று எப்படி அழைக்கலாம் என்று ராகுல் காந்தியை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளர். 

இதுதொடர்பாக பிரக்யா அவையில் கூறியதாவது, மகாத்மா காந்தி தேசத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நான் எந்த உணர்வையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். 

"ஆனால் எதிர்க்கட்சி எனது கருத்தை சிதைக்கிறது. அவை உறுப்பினர் ஒருவர் என்னை 'பயங்கரவாதி' என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய தாக்குதலை, நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒரு பெண்ணாகவும் எனது கவுரவத்திற்கு எதிரான தாக்குதலாக கருதுகிறேன். 

என் மீது எந்த குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. நான் தவறாகக் குறிப்பிடப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளேன். என்னை ஒரு பயங்கரவாதி என்று அழைப்பது அவமானகரமானது. என்னை ஒரு பயங்கரவாதி என்று அழைப்பது சட்டவிரோதமானது, இதை யார் செய்தாலும் அவர்கள் நேரடியாக நீதித்துறை அமைப்பை அவமதிக்கிறார்கள், "என்று அவர் கடுமையாக சாடியுள்ளார். 

இதைத்தொடர்ந்து, பாஜக எம்.பிக்கள், காங்கிரஸ் எம்.பி.,ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூச்சலிட்டனர். தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர்களும், பிரக்யாவின் மன்னிப்பு ஏற்கத்தக்கதாக இல்லை என்றும் கூச்சலிட்டனர். 

.