This Article is From Feb 20, 2019

பொன்.மாணிக்கவேல் நல்லவரா? கெட்டவரா? என்ன சொல்கிறது உச்சநீதிமன்றம்

பொன்.மாணிக்கவேல் நல்லவரா? கெட்டவரா? என்பதை நாங்கள் பார்க்க போவதில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பொன்.மாணிக்கவேல் நல்லவரா? கெட்டவரா? என்ன சொல்கிறது உச்சநீதிமன்றம்

சிலைக் கடத்தல் வழக்கை விசாரித்து வந்த ஐஜி பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து, அவர் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டும், சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் கே.எம்.ஜோசப் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வாதிட்டார். அப்போது, சிலைக் கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்தது அதன் அதிகார வரம்புக்கு மீறியது.

குறிப்பிட்ட துறைக்கான விசாரணை அதிகாரியை நியமிப்பது தமிழக அரசின் உரிமை. அதை பறிக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் செயல்பட்டுள்ளது. நீதிமன்றங்கள் ஒரு குறிப்பிட்ட வழக்கினை மேற்பார்வையிட வேண்டுமானால் அதிகாரியையோ, அல்லது வேறு யாரையோ நியமிக்கலாம். ஆனால் விசாரணை அதிகாரியை நியமிக்க முடியாது.

சாரா பாய் என்ற 95 வயது பெண்மணி மீது பொன்.மாணிக்கவேல் வழக்குப் பதிவு செய்துள்ளார். அவர் சொந்தமாக அருங்காட்சியகம் வைத்துள்ளார். அதிலுள்ள சிலைகள் கடத்தப்பட்டது எனக் கூறி வழக்குப் பதிவு செய்துள்ளார். இப்படி சரியான ஆய்வுகள் இல்லாமல் செயல்பட கூடியவர் என்பதால்தான் பொன்.மாணிக்கவேலை எதிர்க்கிறோம். நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி என்பதால் சென்னை உயர்நீதிமன்றமும் இவரது தவறுகளை கண்டுகொள்வதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பொன்.மாணிக்கவேல் நல்லவரா? கெட்டவரா? என்பதை நாங்கள் பார்க்க போவதில்லை எனவும் அவரின் நியமனம் சரியா? தவறா? என்பதை மட்டுமே பார்க்க போகிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

.