பாகிஸ்தான் தூதரின் இல்லத்திலேயே தங்குவதற்கு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் முடிவு செய்துள்ளார்.
Islamabad: செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக அமெரிக்க பயணத்தின்போது ஓட்டல்களில் தங்குவதற்கு பதிலாக பாகிஸ்தானின் தூதர் இல்லத்தில் தங்குவதற்கு அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் முடிவு செய்துள்ளார். இந்த தகவலை அந்நாட்டின் பிரபல நாளிதழான டான் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவில் வரும் 21-ம்தேதி முதல் 3 நாட்கள் சுற்றுப் பயணத்தை தொடங்கவுள்ளார். வழக்கமாக வெளிநாட்டு தலைவர்கள் அமெரிக்க பயணத்தின்போது ஓட்டல்களில் தங்கிக் கொள்வார்கள்.
இந்த நிலையில் செலவைக் குறைக்க வேண்டும் என்பதற்காக இம்ரான் கான் ஓட்டலில் தங்குவதை தவிர்த்துள்ளார். இதற்கு பதிலாக பாகிஸ்தான் தூதர் அசாத் மஜீதின் இல்லத்தில் இம்ரான் கான் தங்கவுள்ளார். பிரதமரின் இந்த முடிவு பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க பயணத்தின்போது முக்கிய விஐபிக்கள், அமெரிக்காவின் உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகங்கள் மற்றும் வல்லுனர்களை இம்ரான் கான் சந்தித்து பேசவுள்ளார்.
இந்த சந்திப்பு அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடைபெறவுள்ளது.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)