This Article is From Aug 20, 2019

'30 நிமிடத்திற்கு இதயம் நின்றது'- இஸ்ரோவை டென்ஷனின் உச்சத்திற்கு கொண்டு சென்ற சந்திரயான் 2

Chandrayaan-2 Moon Landing: இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பின் பலனாக 30 நாட்கள் பயணத்திற்கு பின்னர் சந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது. இதுதொடர்பான பரபரப்பு தகவல்களை இஸ்ரோ தலைவர் கே.சிவன் வெளியிட்டுள்ளார்.

'30 நிமிடத்திற்கு இதயம் நின்றது'- இஸ்ரோவை டென்ஷனின் உச்சத்திற்கு கொண்டு சென்ற சந்திரயான் 2

ISRO Chandrayaan 2 Mission: இந்தியாவின் மிகப்பெரும் விண்வெளி ஆராய்ச்சி திட்டமான சந்திரயான் 2 வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இன்று அதன் பயணத்தின் முக்கிய மைல் கல்லான நிலவின் சுற்றுப்பாதையை சந்திரயான் 2 அடைந்துள்ளது. இதற்கு முன்பாக விண்கலத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளை சுமார் 30 நிமிடங்கள் பதற்றமடையச் செய்தது.

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ராக்கெட் குறிப்பிட்ட இலக்கில் கொண்டு போய் சேர்த்தது. 

அப்போது ராக்கெட்டில் இருந்து பிரிந்த விண்கலம் பூமிக்கு அருகே குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 45,475 கி.மீ. தொலைவிலும் நீள்வட்ட பாதையில் பூமியை சுற்றி வந்தது. அதன்பின்னர் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ம் தேதி வரை சந்திரயானின் சுற்றுப்பாதை படிப்படியாக 5 முறை அதிகரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. 

இவ்வாறு சந்திரயான்-2 (Chandrayaan-2) நீள்வட்ட பாதையில் தனது வேகத்தை அதிகரித்து பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தூரமாக சென்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் 14ம் நாள் அதிகாலை 2.21 மணிக்கு 6-வது முறையாக சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டு நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது. 

இந்த நிலையில் நிலாவின் சுற்றுப்பாதையை சந்திரயான் 2 அடைந்துள்ளதாக இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது-

சுமார் 30 நிமிடங்களுக்கு எங்களது இதயமே நின்றுவிடும் போலிருந்தது. அந்த அளவுக்கு மிகவும் பதற்றமான நிலையில் சந்திரயான் 2-ன் முக்கிய செயல்பாட்டில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். இன்னும் 3 முக்கிய நிலைகளை விண்கலம் தாண்ட வேண்டியுள்ளது.

விரைவில் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி 100•30 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையில் நிலவை சந்திரயான் 2 சுற்றும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

.